“உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால் அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாக இருக்கின்றது.” (யாக்கோபு 5:14-17).
யாக்கோபு ஐந்தாம் அதிகாரத்தின் இவ்வசனங்கள் கிறிஸ்தவர்களில் அநேகருக்கு மிகவும் பரிச்சயமான வசனங்களாகும். Faith Healers என்று தம்மை அழைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களுக்கு சுகம்கொடுக்க முன் வந்திருக்கும் பல கெரிஸ்மெட்டிக் பச்சோந்திகள் தங்கள் செயல்களை நிரூபிக்க இவ்வசனங்களை உதாரணம் காட்டுவார்கள். இவ்வசனங்களின் அடிப்படையில் தம்மிடம் வருபவர்களுக்கு எண்ணெய் பூசி விசுவாச ஜெபம் செய்து சுகமளிக்க முயலும் கைங்கரியத்தை ரோமன் கத்தோலிக்க குருக்களும், பல கெரிஸ்மெட்டிக் சபைகளும், ஏன், சுவிசேஷக் கிறிஸ்தவ சபைகளும்கூடத் தொழிலாகக் கொண்டுள்ளன. இவர்கள் எந்தளவுக்கு வேதம் புரியாமல் இக்காரியத்தை செய்து வருகிறார்கள் என்பதை இவ்வசனங்களைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.