செப்டெம்பர் 11, 2001ல் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் விண்ணுயர்ந்து நின்ற இரட்டைக் கட்டடங்களை முற்றாகவும், பாதுகாப்பு அமைப்பான பென்டகனின் ஒரு பகுதியையும் பயணிகள் விமானத்தை வைத்துத் தாக்கி அழித்த அல் கையிடா இயக்கத்தின் தலைவன் பின் லாடன் மனித வர்க்கத்தில் பிறந்துள்ள ஒரு சமூகத்துரோகி. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை ஒரே நாளில் ஈவு இரக்கமின்றி அழித்துள்ள பின் லாடன் உலக நாடுகளை தீவிரவாதத்திற்கு எதிராக இன்று ஒன்று திரட்டியிருக்கிறான். அமெரிக்காவுக்கு இழைக்கப்பட்ட தீங்கு அனைத்து உலக நாடுகளுக்கு எதிராகவும் இழைக்கப்பட்டதாகும். உலகம் இன்று இன்னுமொரு கொடூரத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும், பிரிட்டனும், ஏனைய நாடுகளும் தொடுத்துள்ள போரினால் பின்லாடனுக்கு புகலிடமளித்த ஆப்கானிஸ்தானின் டெலிபான் ஆட்சியாளர்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றனர். பின்லாடனை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வர அமெரிக்கா கங்கனம் கட்டி அல் கையிடா இயக்கத்தில் மிஞ்சி இருப்பவர்கள் மீது சக்திமிக்க குண்டு மழை பொழிந்து ஆப்கானிஸ்தான் மலைப்பிரதேசங்களில் போரிட்டு வருகின்றது. கத்தியெடுத்தவன் கத்தியாலேயே மடிவான் என்ற பழமொழி அல் கையிடாவைப் பொறுத்தவரையில் சரியாகவே இருக்கின்றது.