இன்று தமிழர்கள் மத்தியில் காணப்படும் கிறிஸ்தவத்தின் பெரும்பகுதி திருமறையின் அதிகாரத்தில் நம்பிக்கையற்றதாகக் காணப்படுகின்றது. திருமறைக்கு வெளியில் இருந்தும் சத்தியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற அடிப்படைக் கோட்பாட்டைப் பின்பற்றி வரும் கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே சபைகளுக்கும், தனிநபர் ஊழியங்களுக்கும் தமிழர்கள் மத்தியில் குறைவே இல்லை. இத்தகைய நம்பிக்கையின் அடிப்படையில் அமையும் ஊழியங்கள் திருமறைக்கு வெளியில் இருந்து வரும் தனிமனித அனுபவத்தின் அடிப்படையில் எதையும் சத்தியமாக ஏற்றுக் கொள்வதில் ஆச்சரியமில்லை. கெரிஸ்மெட்டிக், பெந்தகொஸ்தே குழுக்களைச் சாராதவர்களும் திருமறையின் மெய்த்தன்மை பற்றிய அறிவும், திருமறையில் ஆழ்ந்த நுண்ணிய ஞானமும் அற்றவர்களாக இருப்பதால் எதையும் சிந்தித்து ஆராய்ந்து பார்க்காமல் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர். திருச்சபைப் போதகர்கள் மத்தியில் வேதஞானம் மிகக் குறைவாக இருப்பதையும் பிரசங்கங்கள், கதா காலாட்சேயபங்களைப் போல காதைக் குளிர வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதையும் யாரால் மறுக்க முடியும்? சுவிசேஷ இயக்கம், சுவிசேஷ சபைகள் என்ற மாயத்தோற்றதில் தமிழ் கிறிஸ்தவ உலகம் முழுதும் இன்று புதிய சுவிசேஷ இயக்கத்தால் நிரம்பி வழிகின்றது. புதிய சுவிசேஷ இயக்கம் என்பது மெய்ச்சுவிசேஷ இயக்கத்திற்கு எதிரான, முரணான ஒரு கூட்டம். இது எப்படி உருப்பெற்றது, இதனால் நம்மத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் என்ன? என்று பார்ப்போம்.