நாம் இதுவரை இவ்விதழின் முதலாவது ஆக்கத்தில் பார்த்த வேதம் போதிக்கும் ஆராதனை விதிக்கு வரலாற்றில் திருச்சபைத் தலைவர்கள் முறையாக ஒரு பெயரைக் கொடுத்தார்கள். அதற்கு வரையறுக்கப்பட்ட ஆராதனை விதி அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட ஆராதனை விதி என்று பெயர். இதனை ஆங்கிலத்தில் The Regulative Principle of Worship என்று அழைப்பார்கள். இது இப்படி ஒரு பெயரைப் பெற்று அழைக்கப்பட்டு பிரபலமானதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. சீர்திருத்தவாத காலத்திற்குப் பின்பு பதினேழாம் நூற்றாண்டில் மறுபடியும் திருச்சபையில் ஒரு ஆபத்து தலைதூக்கியது. இவ்வாபத்து முக்கியமாக ஆராதனையையும், போதக ஊழியத்தையும் பாதிப்பதாக இருந்தது. ஒரு விதத்தில் மறுபடியும் ரோமன் கத்தோலிக்க சடங்கு முறைகளை ஆராதனையில் அறிமுகப்படுத்தும் ஆபத்தாகவும் காணப்பட்டது. இவ்வாபத்து தோன்றிய வரலாற்றை முதலில் பார்ப்போம்.