இரகசிய கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் ஒரு புது கிறிஸ்தவக் கூட்டத்தை தமிழகத்தின் சில சுவிசேஷகப் பிரசங்கிகள் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு மனிதரைப்பற்றி எழுதிய ஒரு கிறிஸ்தவ பிரசங்கியார் அவரை இரகசிய கிறிஸ்தவர் என்று அழைத்து எழுதியிருந்ததை நான் சிலவருடங்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் வாசித்திருக்கிறேன். இரகசிய கிறிஸ்தவர்கள் என்று ஒரு கூட்டம் உண்மையில் இருக்கிறதா? இவர்கள் யார்? வேதம் இதுபற்றி என்ன சொல்லுகிறது என்று நாம் பார்ப்பது அவசியம்.
இரகசிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள், கிறிஸ்துவை விசுவாசித்தபோதும் தங்கள் வீடுகளில் கிறிஸ்துவை அறியாத பெற்றோர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ அல்லது கணவன் மாரிடமோ படவேண்டிய துன்பங்களிலிருந்து தப்புவதற்காக இரகசியமாக கிறிஸ்துவை ஆராதிப்பவர்கள் என்று இப்பிரசங்கிகள் விளக்கம் தருகிறார்கள். இரகசிய கிறிஸ்தவர்கள் தம்மை கிறிஸ்தவர்கள் என்று வெளிப்படையாக அழைத்துக் கொள்ளமாட்டார்கள். பெற்றோர்கள் அல்லது கணவனுடைய கோபத்திற்குப் பயந்து புற மத சடங்குகளையும் இவர்கள் தொடர்ந்து பின்பற்றுவார்கள். வீட்டாருக்குப் பயந்து நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வதையும், கோவிலுக்குப் போவதையும், வேறு சடங்குகளைச் செய்வதையும் இவர்கள் விட்டுவிடுவதில்லை. விசுவாசி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் மனைவி கணவனுக்கு அது ஒருபோதும் தெரியாமலேயே வாழ்வார்கள். ஆனால் இரகசியமாக வேதத்தை வாசித்தும், ஜெபித்தும் வருவார்கள். தாம் கிறிஸ்தவர் என்ற உண்மை தெரிந்து விடும் என்பதற்காக சபைக்கும் வழமையாகப் போக மாட்டார்கள். இவர்களே இரகசிய கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.