இரண்டாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கன்னா பின்னாவென்று வேதபோதனைகளைப்பற்றி விநோதமாக சிந்திக்கத் தொடங்கிய நொஸ்டிசிசத்தாலும், வேத ஆராய்ச்சியை உதாசீனம் செய்து எல்லைமீறி வெறித்தனமாக உணர்ச்சிகளுக்கு தூபம் போட்ட மொன்டனிசத்தாலும் திருச்சபைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டது. திருச்சபையின் ஆத்மீகம் பலவீனமடைந்திருந்தது. இக்காலப்பகுதிகளிலேயே சபைப்பிதாக்கள் தங்களுடைய சபையில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்கினர். அவர்கள் மிகவும் திறமைசாலிகளாகவும், கடமைப்பாடுடையவர்களாகவும் இருந்தனர். இவர்களில் ஐரேனியஸ், டர்டூலியன், சிப்பிரியன், அலேக்சாந்திரியாவைச் சேர்ந்த கிளமண்ட், ஒரிகன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் மூன்று பெரும் பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. இப்பிரச்சனைகளை இவர்கள் தீர்மானத்துடன் சந்தித்தபோதும், இப்பிரச்சனைகளைக் குறித்து இவர்கள் எடுத்த தீர்மானங்கள் பிற்காலத்தில் மேலும் பெரிய பிரச்சனைகளை உருவாக்கின.