இன்று ஆராதனையில் இசைக்கும், இசைக்கருவிகளுக்கும் அளவுக்கு அதிகமாக இடம் கொடுக்கப்படுகிறது. இசையும் ஆராதனையின் ஒரு அம்சம் என்று தவறாகக் கருதப்படுகிறது. கர்த்தர் ஒருபோதும் இசையையும், இசைக்கருவிகளையும் ஆராதனையின் அம்சங்களாக வேதத்தில் வெளிப்படுத்தவில்லை. ஜெபம், பிரசங்கம், பாடல்கள், வேதவாசிப்பு, திருவிருந்து, திருமுழுக்கு, காணிக்கை எடுத்தல் ஆகியனவையே ஆராதனையின் முக்கிய அம்சங்கள். இசைக்கு இதில் இடம் கொடுக்கப்படவில்லை. அதனால் ஆராதனையில் இசை இருக்கக்கூடாது என்று நான் சொல்ல வரவில்லை. இசை ஆராதனையின் ஒரு முக்கிய அம்சம் அல்ல; முக்கிய அம்சமாகக் கருதப்படக்கூடாது. அது நாம் கர்த்தரின் மகிமையைப் பாடுவதற்கு உதவும் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, பிரசங்கம் ஆராதனையின் முக்கிய அம்சம். ஆனால், பிரசங்க மேடை ஆராதனையின் முக்கிய அம்சமல்ல. அதற்காக பிரசங்க மேடை இருக்கக்கூடாது என்று சொல்வோமா? பிரசங்க மேடை பிரசங்கம் செய்ய நமக்கு உதவும் வெறும் கருவியே. பிரசங்கத்தில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டுமே தவிர பிரசங்க மேடை எத்தனை அழகாக இருக்க வேண்டும் என்பதில் அல்ல. இதைப்போலத்தான் ஆராதனையில் நாம் ஆவியோடும், உண்மையோடும் கர்த்தரைப் பாடித் துதிப்பதில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டுமே தவிர இசைக்கருவிகளில் அல்ல.