உதவிக்காரர்கள் (Deacons)

கர்த்தருடைய சபையில் இன்று இரண்டு வகை ஊழியக்காரர் இருக்கிறார்கள். அவர்கள் மூப்பர்களும், உதவிக்காரர்களும் (1 தீமோத்தேயு 3). இவர்களே திருச்சபை ஊழியத்திற்காக இன்று கொடுக்கப்பட்டிருக்கும் நிரந்தர சபை ஊழியர்கள். இந்த இரண்டு வகை ஊழியமும் திருச்சபைக்கு மிக அவசியமானவை. இவை இல்லாமல் திருச்சபைகள் நல்ல முறையில் இயங்க முடியாது. ஒரு சபை ஆரம்பிக்கும் காலத்தில் இந்த ஊழியர்களைக் கொண்டதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அந்த சபை வளருகிறபோது இந்த ஊழியங்களை அந்த சபை கொண்டதாக இருக்க வேண்டும். இன்று தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இருக்கும் சபைகளுக்கு இந்த ஊழியங்களைப் பற்றிய வேதபூர்வமான சிந்தனைகள் இல்லாமலிருப்பது நல்லதல்ல. அநேக சபைகளில் இந்த இருவகை ஊழியங்களின் தன்மை, அவற்றின் பயன்பாடுகள் தெறியாமல் மனித சிந்தனைப்படியான காரியங்களைச் செய்துவருகிறார்கள். முக்கியமாக உதவிக்காரர்கள் இன்று அநேக சபைகளில் மூப்பர்களுக்கான அதிகாரத்தைக் கொண்டு போதகர்கள் போல் நடந்து வருகிறார்கள். இந்த சபைகளுக்கு மூப்பர்களுக்கும், உதவிக்காரர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடு புரியவில்லை. உதவிக்காரர்கள் மூப்பர்களைப்போல நடந்து கொள்வது தவறாகவும் சிலருக்குப் படவில்லை. சில சபைகளில் போதகர்களுக்கே உதவித்தொகை போதாத நிலையில் உதவிக்காரர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு போதகர்களை ஆண்டு வருகிறார்கள். இதைவிட மோசமாக உதவிக்காரராக இருக்க எந்தத்தகுதியும் இல்லாதவர்கள் பல சபைகளில் உதவிக்காரர்களாக இருந்து வருகிறார்கள். இப்படிப் பலவிதமான குளருபடிகள் சபை ஊழியங்களைப் பொறுத்தவரையில் சபை சபையாக நடந்து வருகின்றன. இந்த ஆக்கத்தில் உதவிக்காரர்களைப் பற்றி வேதம் என்ன சொல்கிறது? யார் அப்பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்? அவர்களுடைய பணிகள் என்ன? என்று ஆராய்வதே என் நோக்கம். சீர்திருத்த சிந்தனை கொண்டு வளர்ந்து வரும் சபைகளுக்கு இது உதவும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன்.

Continue reading