எல்லா சபைப்பிரிவுகளுக்கும் பொருந்தி வருகிற இறையியல் கல்லூரிகள் (Inter-Denominational Bible College) என்ற இறையியல் கல்லூரி விளம்பரங்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இதற்கு பொருள் என்ன என்று எல்லோருமே சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால், சிந்திக்காமல் இருந்துவிட்டால் எப்போதுமே நமக்கு ஆபத்துத்தான் காத்திருக்கிறது. ஆகவே, இதைப்பற்றி நாம் ஆராய்வது அவசியம். சமீபத்தில் நான் வாசித்த இந்திய சபை சரித்திரம் பற்றிய ஒரு ஆங்கில நூலில் உள்அட்டையில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “இது செராம்பூர் இறையியல் கல்லூரியினால் பட்டப்படிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால், பட்டப்படிப்புக்கு இதைமட்டும் உத்தியோகபூர்வமான வரலாற்று நூலாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஏனைய சபைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் சில முக்கியமான வேதபோதனைகளைக்குறித்த வேறுபாடான கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் இந்நூலின் கருத்துக்களை மட்டும் ஏற்றக்கொள்ள வேண்டும் என்று நாம் வற்புறுத்தவில்லை” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த விளக்கம் ஓரளவுக்கு இன்டர்-டிநோமினேஷனல் இறையியல் கல்லூரிகள் பற்றிய உண்மையை எடுத்துக் காட்டுவதாக இருக்கின்றது.