ஏன் பிரசங்கம்? என்ற கேள்விக்கு கடந்த இதழில் பதில் அளித்திருந்தோம். ஏனைய எல்லா செய்திப்பரவல் சாதனங்களையும்விட பிரசங்கமே கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்துவதற்காக தெய்வீக வழிநடத்தலின்படி நியமிக்கப்பட்டிருக்கிறது. பிரசங்கத்தை ஆசீர்வதிப்பதுபோல் கர்த்தர் வேறு எதையும் ஆசீர்வதிப்பதில்லை என்பதில் நான் உறுதியானதும், அசைக்க முடியாததுமான நம்பிக்கை வைத்திருக்கிறேன். இது மாம்ச ரீதியிலான நம்பிக்கையல்ல. வேதம் நமக்குப் போதிக்கும் சத்தியத்தின் அடிப்படையிலான நம்பிக்கை. அத்தகைய நம்பிக்கையை நெஞ்சில் கொண்டிராத எந்தப்பிரசங்கியும் பரிசுத்த ஆவியின் வல்லமையைத் தன்னுடைய ஊழியத்தில் காணமுடியாது என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்.