ஏரியனும், சபைக் கவுன்சில்களும்
திருச்சபையில் 4-ம், 5-ம் நூற்றாண்டுகளில் வேத போதனைகள் சம்பந்தமான கடுமையான கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வந்திருந்திருக்கின்றன. முக்கியமாக இக்கருத்து வேறுபாடுகள் கிறிஸ்துவின் தெய்விக, மானுட தன்மைகளைப் பற்றியதாக இருந்தன. இக்காலங்களில் தனது போதனைகள் வேதபூர்வமானவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை திருச்சபைக்கு ஏற்பட்டது. சபைத்தலைவர்கள் கூடி வேத போதனைகள் சம்பந்தமான விவாதங்களை நடத்தி தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டியிருந்தது. இந்தக் காலப்பகுதியில் திருச்சபை நான்கு முக்கிய சமயக் குழுக்களை (Church Councils) சந்தித்தது. இந்தக் குழுக்கள் திருச்சபையின் முக்கியமான தலைவர்களை உள்ளடக்கி சமய சம்பந்தமான கருத்து வேறுபாடுகளை ஆராய்ந்து முடிவெடுக்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டிருந்தன. இந்தக் காலப்பகுதியில் இறையியல் போதனை சம்பந்தமாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இக்காலப்பகுதிக்குப் பிறகும் சபைகளைப் பாதித்தன. அத்தகைய இறையியல் கருத்து வேறுபாடுகளில் ஒன்றுதான் “ஏரியனின் கருத்துவேறுபாடு” (Arian Controversy) என்று வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்படுகின்றது.