வாசிப்பின் அவசியத்தைப் பற்றி உங்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசைப்படுகிறேன். ஏன் என்று கேட்கிறீர்களா? இன்று பெரும்பாலான தமிழ் கிறிஸ்தவர்களிடம் வாசிக்கும் பழக்கம் இல்லாமலிருக்கும் காரணத்தினால்தான். இது என் மனதில் நானே வளர்த்துக் கொண்டிருக்கும் கற்பனை என்று எண்ணி விடாதீர்கள். இதை ஒத்துக்கொண்ட அநேக கிறிஸ்தவர்களை நான் சந்தித்திருக்கிறேன். நம்மக்களுக்கு வாசிக்கும் பழக்கம் ஏன் இல்லாமலிருக்கிறது என்று ஆழமாக சிந்தித்துப்பார்த்தேன். அதற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டேன். நம்முடைய பெற்றோர் நாம் படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும் என்று ஆசைப்படுவது சகஜம். முழுநேரமும் கல்லூரிப்படிப்புக்கு உதவும் நூல்களை நாம் வாசிப்பதை அவர்கள் பார்க்க ஆசைப்படுவார்கள். டியூஷனுக்குப் போவதையும் ஊக்கப்படுத்துவார்கள். இதையெல்லாம் செய்து நாம் எப்படியாவது பாஸ் செய்து பட்டம் பெற்று வேலைக்குப் போக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய வாழ்க்கை இலட்சியம். இதனால் அவர்கள் நம்மை எப்போதுமே வேறு எந்தப்புத்தகங்களையும் வாசிக்க உற்சாகப்படுத்துவதில்லை, வாசிக்கவும் விடுவதில்லை. அது வீண் வேலை என்பது அவர்களுடைய எண்ணம்.