கிறிஸ்தவம் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றில் வளர்ந்த ஒரு வாழ்க்கை நெறி, வரலாறு, சமுதாய வளர்ச்சியையும், சமுதாய நிகழ்ச்சிகளையும் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கிறது. உலக சமுதாயங்கள் மெய்யான விடுதலையை எதன் மூலம்? எப்படி? அடைய முடியும் என்பதைக் காட்டுவதே கிறிஸ்தவம். ஆகவே, கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ சபைகளும் தாங்கள் வாழும் சமுதாயம் எந்த விதத்தில் சிந்திக்கிறது? எந்தப்போக்கில் போகிறது? என்ற கேள்விகளைக் கேட்காமல் இருந்துவிட முடியாது. அப்படி சமதாயத்தின் போக்கை அறிந்துகொள்வதில் அலட்சியம் காட்டினால் சுவிசேஷத்தை நாம் பயனுள்ள முறையிலும், தெளிவாகவும் மக்களுக்கு ஒருபோதும் எடுத்துவிளக்க முடியாது.