யோவான் தன்னுடைய நிருபத்தில் பின்வருமாறு எழுதியிரக்கிறார்: “உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ நிலைத்திருப்பான்.”
விசுவாசி உலக இச்சைகளுக்கு தன்னைப் பலிகொடுத்து தன்னுடைய சாட்சியை இழந்துவிடக்கூடாது என்று உலக இச்சைகளின் ஆபத்தைப்பற்றி எச்சரித்து யோவான் எழுதிய வார்த்தைகள் இவை. இன்று இந்த வார்த்தைகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு உலக இச்சைகளை நாடிப்போய்க் கொண்டிருக்கிற திருச்சபை. உலகம் ஆசையாய் அனுபவிக்கின்றவற்றை நாமும் அனுபவிப்பதில் என்ன தவறு என்று கேட்டு உலகத்தை பிரதிபலிக்கும் இசையையும், ஆராதனை முறைகளையும், வியாபாரரீதியிலான ஊழிய முறைகளையும் சபைக்குள் நுழைத்து அழகு பார்க்கிறது சபை. உலகத்தைப் பின்பற்றி சபைகளிலும், ஊழியத்திலும் இன்று அநேகர் செய்துவரும் அட்டூழியங்கள் சொல்லி மாளாது.