ஜொனத்தன் எட்வர்ட்ஸ் (Jonathan Edwards) அமெரிக்காவில் கொனெடிகெட் மாநிலத்தில் அக்டோபர் 5-ம் திகதி 1703-ல் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு கொங்கிரிகேஷனல் சபையில் (Congregational Church) 64 வருடங்கள் போதகராக இருந்தார். அவருடைய தாயார் மசசுசெட்ஸ் மாநிலத்தில் (Massachussetts) இருந்த நொர்தாம்டன் (Northampton) என்ற ஊரில் இருந்த சபையின் போதகரான சொலமன் ஸ்டொடரின் (Solomon Stoddar) மகள். இத்தனையையும் பார்க்கிறபோது நிச்சயமாக ஜொனத்தன் எட்வர்ட்ஸ் கிறிஸ்தவனாக வராமலும், ஊழியத்துக்கு வராமலும் இருக்க முடியாது என்று தீர்மானித்து சிறுவயதிலேயே கர்த்தருக்கு அவரை அர்ப்பணித்திருப்பார்கள் இந்திய கிறிஸ்தவர்கள். கிறிஸ்தவமோ, போதக ஊழியமோ குடும்பச் சொத்து இல்லை. குடும்பப் பாரம்பரியத்தின் மூலம் ஒருவர் கிறிஸ்தவராகவோ போதகராகவோ வரமுடியாது. எத்தனை பெரிய ஆத்மீக வளமுடைய குடுத்பத்தில் பிறந்திருந்தாலும், எத்தனை பெரிய போதகருக்கு மகனாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தானாக கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து, அவரால் அழைக்கப்பட்டால் மட்டுமே போதக ஊழியத்திற்கு வரமுடியும். கர்த்தர் செய்ய வேண்டிய காரியத்தை மனிதன் செய்ய முடியாது.