ஊழியம் குடும்பச் சொத்தாகலாமா?

தமிழகத்திலும், தமிழகத்திற்கு வெளியிலுள்ள தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளிலும் காணப்படும் கிறிஸ்தவ சபைகளிலும், ஊழியங்களிலும் பல காலமாக போதக ஊழியத்திற்கும், ஏனைய ஊழியங்களுக்கும் வருகின்றவர்கள் பெரும்பாலும் ஏற்கனவே அந்த ஊழியங்களில் இருப்பவர்களின் குடும்ப அங்கத்தினர்களாக இருந்துவருவதைக் காணலாம். நேருவுக்குப் பின் அவர் மகள் இந்திரா பிரதமராகியதும், அவருக்குப்பின் ராஜிவ் காந்தியும், இனி சோனியாவோ அல்லது ராகூலோ, பிரியங்காவோகூட பிரதமராகிவிடலாம் என்ற குடும்பப்பாரம்பரிய அரசியல் இந்தியாவில் பின்பற்றப்பட்டு வருவதைப் பார்க்கலாம். தமிழ் இனத்தில் குடும்பப்பாரம்பரிய தலைமை முறை ஆதியில் இருந்தே இருந்துவந்திருக்கின்றது. நாடான்ற தமிழரசர்கள் தங்கள் பிள்ளைகளை அரசர்களாக்கிப்பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். சாதிக்கொடுமை நிறைந்த நம்மினத்தில் குலவழக்கத்தைப் பின்பற்றி தொழில்கள் செய்து வரும் முறை இன்றும் இருந்துவருகின்றது. பிராமணனின் மகன் குலத்தொழிலைத் தொடர்ந்து பின்பற்றுவதும், கோவில் பூசாரியின் மகன் அதே தொழிலைத் தொடர்வதும், சக்கிலியனின் மகன் அவனுடைய குலத் தொழிலைச் செய்வதும் தமிழினத்தின் பாரம்பரிய குலவழக்கத் தொழில் முறை அமைப்பு. இது கர்த்தர் ஏற்படுத்திய வழிமுறையல்ல, மனிதன் தன் சுயநலத்தின் காரணமாக ஏனையோரை சுரண்‍‍டிப் பிழைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்டுள்ள தவறான வழிமுறை. இது சிறுபான்மையினரான ஓரினம் ஏனை இனங்களை ஆண்டுப் பிழைப்பதற்கு சமுதாயத்தில் வழிவகுத்து இன்றும் பல இனங்கள் தாழ்வான நிலையில், தாழ்வுமனப்பான்மையோடு தொடர்ந்தும் வாழ்ந்துவர வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் குலத்தொழில்முறை சமுதாயத்தில் ஒரு சில இனங்கள் தங்களுடைய அதிகாரத்தையும், பணபலத்தையும், ஆதிக்கத்தையும் தொடர்ந்து நிலைநாட்டிக் கொள்வதற்கும் வழிவகுக்கிறது.

Continue reading