வேதத்தில் உலகம் என்ற வார்த்தை பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும், கர்த்தரால் படைக்கப்பட்டு, மனிதன் வாழ்வதற்காகவும், அனுபவிப்பதற்காகவும் கொடுக்கப்பட்டிருக்கிற உலகத்தில், ஆதாமின் பாவத்திற்குப் பிறகும் மனிதனுக்கு நன்மை பயக்கக்கூடிய காரியங்கள் உண்டு என்பதையும் கடந்த இதழின் மூலம் அறிந்து கொண்டோம். அத்தோடு உலகம் என்ற வார்த்தை வேறொரு விதத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதையும் அறிந்து கொண்டோம். 1 யோவான் 2:15-ல் உலகத்தில் அன்பு கூறாதீர்கள் என்று யோவான் சொன்னபோது, நமக்கு உலக இச்சை இருக்கக்கூடாது என்ற பொருளில் சொன்னார். நாம் நியாயபூர்வமாக, நமது விசுவாசத்திற்கும், கர்த்தருடைய பெயருக்கும், பங்கம் ஏற்படாதவகையிலும், பத்துக் கட்டளைகளை மீறாமலும் இந்த உலகத்தில் கர்த்தர் தந்திருப்பவைகளை அனுபவிக்கும் உரிமை உண்டு. அதை மீறுவதே உலக இச்சையாகும்.