உலகத்தில் அன்புகூராமலிருங்கள் என்ற வேத போதனையை கடந்த இரண்டு இதழ்களிலும் ஆராய்ந்து வந்திருக்கிறோம். அப்படி உலகத்தின் மீது அன்புகூராதிருக்க நாம் உலகவழிப்படி சிந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று கடந்த இதழில் பார்த்தோம். உலக ஆசை முதலில் நமது மனதைத் தாக்கி அதன்பின்பே நமது நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது. நம்முடைய சிந்தனை வேதபூர்வமாக இருக்குமானால் நமது நடவடிக்கைகளும் வேதபூர்வமாக அமைவதற்கு இலகுவாக இருக்கும். சிந்தனைப்போக்கு உலக ஆசைக்கு இடங்கொடுக்குமானால் நடவடிக்கைகள் அனைத்தும் உலகத்தைச் சார்ந்தே இருக்கும். சிந்தனைக் கோளாறினாலேயே பலர் இன்று விசுவாச வாழ்க்கையில் தடம் மாறி வீழ்ந்து போகிறார்கள்.
உதாரணத்திற்கு இன்று தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் வேலை செய்கின்ற கிறிஸ்தவர்கள் அதிகம். வேறு நாடுகளுக்குப் போய் வேலை செய்வதிலும், வாழ்வதிலும் எந்தத் தவறும் இல்லை. அது தனிப்பட்டவர்களின் விருப்பம். ஆனால், திருமணமானவர் களும், திருமணமாகி பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறவர்களும் குடும்பத்தை சொந்த நாட்டில் விட்டுவிட்டு வருடக்கணக்கில் அவர்களைப் பிரிந்து வெளி நாடுகளில் வேலை செய்கிறார்கள். இதைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றன அனேக சபைகள். அத்தோடு சபைகளுக்கு இவர்கள் மூலம் நல்ல வருமானம் வரும் என்ற ஆசையில் இத்தகையோருக்கு புத்தி சொல்லா மல் ஊக்குவிக்கின்ற போதகர்களும், சபைகளும்கூட இருக்கின்றன.