கேள்வி 79: ஒன்பதாவது கட்டளை என்ன?
பதில்: பிறனுக்கு விரோதமாய் பொய்சாட்சி சொல்லாதிருப்பாயாக, என்பது ஒன்பதாவது கட்டளையாகும்.
(யாத்திராகமம் 20:16)
கேள்வி 80: ஒன்பதாவது கட்டளை மூலமாக என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
பதில்: மனிதர்களுக்கிடையில் உண்மை பராமரிக்கப்படவும், விஸ்தரிக்கப்படவும் வேண்டுமென்றும், நம்முடையதும், அயலானுடையதும் நற்பெயர் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், முக்கியமாக சாட்சி சொல்லுவதில் அது காணப்பட வேண்டும் என்றும் ஒன்பதாவது கட்டளை எதிர்பார்க்கிறது.
(சகாரியா 8:16; 1 பேதுரு 3:16; அப்போஸ்தலர் 25:10; 3 யோவான் 12; நீதிமொழிகள் 14:5, 25)
கேள்வி: 81 ஒன்பதாவது கட்டளை எதைத் தடைசெய்கிறது?
பதில்: சத்தியத்தைக் குறித்து எவரும் தப்பெண்ணங்கொள்ளுதலையும், நம்முடையதும், அயலானுடையதும் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதையும் ஒன்பதாவது கட்டளை தடைசெய்கிறது.
(ரோமர் 3:13; யோபு 27:5; லேவியராகமம் 19:16; சங்கீதம் 15:3)
விளக்கவுரை: இதுவரை நாம் பார்த்து வந்துள்ள எட்டு கட்டளைகளைப் போலவே இந்த ஒன்பதாவது கட்டளையும் மிகவும் முக்கியமானது. அதுவும் நமது இனத்தார் மத்தியில் இந்தக் கட்டளை பெருமளவில் மீறப்பட்டு வருகிறது. பாவம் இருக்குமிடமெல்லாம் இந்தக் கட்டளை மீறப்படுகிற போதும் நம்மத்தியில் இதை மீறுவது ஒரு பண்பாடாக வளர்ந்து நிற்கிறது. ஆகவே, இந்தக் கட்டளையை மிகக் கவனத்துடன் நாம் ஆராய்ந்து கர்த்தர் இதன் மூலம் போதிக்கும் சத்தியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.