(வேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கடினமான சில பகுதிகள் உண்டு. சிலர் அவற்றைக் குழப்பமான பகுதிகளாகவும், விளங்கிக்கொள்ளவே முடியாத பகுதிகளாகவும் கருதி அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். வேறுசிலர் அப்பகுதிகளுக்கு தவறான விளக்கங்களைக் கொடுத்துவிடுகிறார்கள். வேதத்தை எழுத்தில் தந்திருக்கும் கர்த்தரே விளங்கிக்கொள்வதற்கு கடினமானதாக இருக்கும் பகுதிகளையும் தந்துள்ளார். அவற்றை முறையாக, கவனத்தோடும் ஆவியின் துணையோடும் ஆராய்ந்து படித்தால் கர்த்தர் அவற்றின் மூலம் வெளிப்படுத்தும் சத்தியங்களை நாம் இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். அத்தகைய வேதப்பகுதிகளை இந்த இதழிலிருந்து வாசகர்களின் நன்மை கருதி ஆராயவிருக்கிறோம். போதகர் ஃபிரெட் சீபர்ட் (Fred Siebert, Australia) இந்தப் பகுதிகளுக்கு இந்தப் புதிய வருடத்திற்கான இதழ்களில் விளக்கமளிப்பார்.)
வேவேதத்தில் விளங்கிக்கொள்வதற்கு கஷ்டமான ஒரு பகுதியை சந்திக்க நேருகிறபோது ஒரு போதகனோ அல்லது வேதமாணாக்கனோ என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்வியோடு இந்த இதழில் இருந்து வேதத்தில் சிக்கலானதாகக் காணப்படும் வேதப்பகுதிகளை நாம் ஆராயப் போகிறோம். கர்த்தரால் வெளிப்படுத்தப்படாத, நம்மால் புரிந்துகொள்ள முடியாத சில விஷயங்கள் வேதத்தில் உள்ளன. அதே வேளை, படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய கடினமான பகுதிகளும் வேதத் தில் உள்ளன. அவ்வாறு விளங்கிக்கொள்ளக் கடினமானதாகத் தோன்றும் பகுதிகளை கர்த்தரின் துணையோடு ஆராய்வதே நம்நோக்கம்.