கேள்வி 94: தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களைப் பராமரிக்கவும், கிறிஸ்துவின் மீட்பின் ஆசீர்வாதங்களை அவர்கள் அடையவும் கர்த்தர் பயன்படுத்தும் வெளிப்புறமானதும் சாதாரணமானதுமான கிருபையின் சாதனங்கள் யாவை?
பதில்: முக்கியமாக வார்த்தை, திருமுழுக்கு, திருவிருந்து, ஜெபம் ஆகிய திருநியமங்களையே கர்த்தர் தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களைப் பராமரித்து கிறிஸ்துவின் மீட்பின் ஆசீர்வாதங்களை அவர்கள் அடையப் பயன்படுத்தும் வெளிப்புறமானதும் சாதாரணமானதுமான கிருபையின் சாதனங்கள். இவையனைத்தும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இரட்சிப்பை அடையும்விதமாக திட்ப உறுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.
(மத்தேயு 28:19-20; அப்போஸ்தல நடபடிகள் 2:41-42; 46-47.)
விளக்கவுரை: 88-வது வினாவிடையில் இரட்சிப்பை அடைவதற்கு ஒருவனில் கர்த்தர் எதிர்பார்க்கும் உள்ளார்ந்த கிருபைகளைப் பார்த்தோம். மனந்திரும்புதலும், விசுவாசமுமே அந்த உள்ளார்ந்த கிருபைகள். இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கில் (கிறிஸ்துவின் மீட்பின் பலன்கள் எவ்விதமாக தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு நடைமுறையில் கொடுக்கப்படுகிறது என்பது பற்றிய விளக்கம்) இவை அடங்குகின்றன. இந்த உள்ளார்ந்த கிருபைகள் பரிசுத்த ஆவியின் கிரியையினால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.