சுனாமி 2004ல் இலட்சக்கணக்கான மக்களை ஆசியாக் கண்டத்தின் பல நாடுகளில் சின்னாப்பின்னமாக்கியது. கடந்த வருடம் வருடம் அமெரிக்காவின் தென்பகுதியில் கட்ரீனா சூறாவளி ஒரு நகரத்தையே அழிவுக்குக் கொண்டுவந்து உலகத்தின் செல்வமிக்க நாட்டை நிலைகுழைய வைத்தது. அதே நாட்டின் புளோரிடா மாநிலத்தை இருபது தடவைகளுக்கு மேலாக சூறாவளிகள் இந்த வருடம் மட்டும் தாக்கியிருக்கின்றன. சமீபத்தில் “வில்மார்” சூறாவளி மறுபடியும் புளோரிடாவைத் தாக்கி சேதமேற்படுத்தியது. இதெல்லாம் போதாதென்று பாகிஸ்தானைச் சேர்ந்த காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு என்பதினாயிரம் பேர்வரை மாண்டனர். பனிக்குளிரால் பரிதவித்து அங்கே இன்றும் இறந்து கொண்டிருப்பவர்கள் அநேகர். கடந்த ஒரு வருடத்துக்குள்ளாக இந்த உலகத்தில் இத்தனையும் நிகழ்ந்து நாலு இலட்சம் மக்கள் வரையில் இந்தப் பேரழிவுகளால் மட்டும் உயிரிழந்திருக்கிறார்கள். அன்றாடம் இறந்து கொண்டிருப்பவர்களைத் தவிர சடுதியாக எதிர்பாராத விதத்தில் இத்தனைப் பெருந்தொகையினர் இந்த உலகத்தைவிட்டே போய்விட்டார்கள். இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் உலகத்து மனிதன் கடவுள் இருக்கிறாரா? அவருக்கு உண்மையிலேயே கண்களிருக்கின்றனவா என்று அலறித் துடித்துக் கேட்கிறான். அவனால் இதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.