கிறிஸ்தவக் கோட்பாடுகள்

கேள்வி 97: புதிய உடன்படிக்கையின் திருவருட் சாதனம் என்பது என்ன?

பதில்: கிறிஸ்துவும், புதிய உடன்படிக்கையின் பலாபலன்களும் உணரக்கூடிய அடையாளங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, முத்திரையிடப்பட்டு விசுவாசிகளுக்கு வழங்கும்படியாக கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்ட பரிசுத்த நியமனமே புதிய உடன்படிக்கையின் திருவருட் சாதனமாகும்.

(1 கொரிந்தியர் 11:23-26)

கேள்வி 98: புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனங்கள் யாவை?

பதில்: திருமுழுக்கும் (ஞானஸ்நானம்), திருவிருந்துமே (கர்த்தருடைய பந்தி) புதிய உடன்படிக்கையின் திருவருட்சாதனங்களாகும்.

(மத்தேயு 28:19; 1 கொரிந்தியர் 11:23-26).

விளக்கவுரை: ரோமன் கத்தோலிக்க மதம் ஏழு திருவருட்சாதனங்கள் இருப்பதாக போதிக்கிறது. சீர்திருத்தவாதம் இவற்றில் திருமுழுக்கையும், திருவிருந்தையும் மட்டுமே வேதபூர்வமான திருவருட்சாதனங்களாக ஏற்றுக்கொண்டன. சீர்திருத்தவாதகாலத்தில் சீர்திருத்த சபைகள் இந்த முடிவுக்கு வருவதற்கு தகுந்த காரணங்கள் இருந்தன. திருச்சபைகள் பின்பற்ற வேண்டிய திருவருட்சாதனங்களாக இருப்பதற்குரிய சில வேத இலக்கணங்களை அவர்கள் விளக்கியிருந்தார்கள். (1) அவை இயேசு கிறிஸ்துவினால் கட்டளையிட்டு நியமிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். (2) கர்த்தரின் கிருபையினால் நிகழ்ந்த கண்களால் காணமுடியாத உள்ளார்ந்த கிரியைகளை விளக்கும் அடையாளங்களாக, வெளிப்புறச் சாதனங்களாக இருக்க வேண்டும். (3) கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் திருச்சபை தொடர்ந்து நடைமுறையில் பின்பற்ற வேண்டிய சாதனங்களாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்க வேண்டும். (4) கடைசியாக, இவற்றைப் பெற்றுக்கொள்ளும் விசுவாசிகளின் விசுவாசத்தை உறுதிப்படுத்தி, பெலப்படுத்தும் முத்திரையாக வேதத்தில் விளக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விளக்கங்களின் அடிப்படையில் திருமுழுக்கும், திருவிருந்தும் மட்டுமே இத்தகுதிகளைக் கொண்டிருப்பனவாக வேதம் போதிப்பதால் அவற்றை மட்டுமே சீர்திருத்த திருச்சபைகள் திருவருட்சாதனங்களாக ஏற்றுக்கொண்டன.

Continue reading