நீலகத்தில் உயர்ந்த, புனிதமான ஊழியமாகக் கருதப்படுவது போதக ஊழியம். போதக ஊழியம் என்று நான் குறிப்பிடுவது வேத இலக்கணங்களுக்குப் பொருந்தி வந்து திருச்சபையால் தெரிவு செய்யப்பட்டு திருச்சபையில் ஆத்துமாக்களுக்குப் போதித்தும், அவர்களுடைய ஆத்மீகத் தேவைகளைக் குறிப்பறிந்து தீர்த்தும் வைக்கிற ஊழியக்காரரின் பணியையே குறிக்கும். வேறெதையும் நாம் போதக ஊழியமாகக் கருதுவதற்கு வேதம் இடம் தரவில்லை. இதனை ஆங்கிலத்தில் Pastoral Ministry என்று குறிப்பிடுவார்கள். இப் பணிபுரிபவர்களை வேதம் ஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி அழைக்கிறது. போதகர் (Pastor), மூப்பர் (Elder), கண்கானி (Overseer), உபதேசியார் (Teacher) போன்ற பல வார்த்தைகள் போதக ஊழியத்திலிருப்பவர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. தமிழினத்தில் இந்த ஊழியம் இன்றைக்கு தள்ளாடும் நிலை யிலிருக்கிறதைப் புறஜாதியாரும் அறிவர். வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுகிற ஒரு சாதாரண பதவியாகவும், ஆத்துமாக்கள் மேல் அதிகாரம் செலுத்தக்கூடிய ஒரு அதிகாரப் பதவியாகவும், குடும்பத்தை வளர்த்துக்கொள்ள வசதியான ஒரு தொழிலாகவுந்தான் பெரும்பாலும் போதக ஊழியம் இன்றைக்கு திருச்சபைகளில் இருந்து வருகிறது. இதற்கு ஒரிரு விதிவிலக்குகள் நம்மத்தியில் நிச்சயம் இருக்கலாம்.