ஜெர்மனியில் ஆரம்பமான திருச்சபை சீர்திருத்தம்
மனிதநலவாதிகள் (Humanists) திருச்சபை சீர்திருத்தத்திற்கான பாதையை அமைப்பதில் அதிக பங்கைப் பெற்றிருந்தபோதும் அவர்களால் திருச்சபையில் மெய்யான வேத அடிப்படையிலான சீர்திருத்தத்தைக் கொண்டுவர முடியவில்லை. திருச்சபை சீர்திருத்தமாகிய எழுப்புதல் ஏற்படுவதற்கு ஒரு மனிதன் ஆழமான ஆத்மீக தாகத்தையும், விசுவாசத்தையும், நெஞ்சுரத்தையும் கொண்டிருக்க வேண்டும். சுவிசேஷத்திலும், அதை அறிவிப்பதிலும் நெருப்பாக எரியும் வாஞ்சையையும், உத்வேகத்தையும் தனக்குள் கொண்டிருக்க வேண்டும். இவற்றோடு அதிக திறமைகளையும், பெருந்தைரியத்தையும் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய மனிதனாகவே ஜேர்மனியில் திருச்சபை சீர்திருத்தத் திற்காகக் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட மார்டின் லூதர் (Martin Luther) இருந்தார்.