பரிசுத்தவான்களின் விடாமுயற்சி
Perseverance of the Saints by Calvin Waldon
இரட்சிப்பின் அநுபவத்தை அடைந்து இயேசு கிறிஸ்துவை தன்னுடைய வாழ்க்கையில் மெய்யாக விசுவாசிக்கிற மனிதன் தன்னுடைய விசுவாச வாழ்க்கையை விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடத்திச் செல்லுவான் என்பது வேதம் போதிக்கின்ற சத்தியமாகும். இந்தப் போதனையை Perseverance of the Saints என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். சீர்திருத்த போதனைகளில் முக்கியமான இந்தப் போதனையை சீர்திருத்த விசுவாச அறிக்கைகளும், வினாவிடைப் போதனைகளும் தெளிவாக விளக்குகின்றன. 1689 விசுவாச அறிக்கையின் 17ம் அதிகாரம் “பரிசுத்த வான்களின் விடாமுயற்சி” என்ற தலைப்பில் இந்தப் போதனையை விளக்குகிறது. எந்தளவுக்கு எது மெய்க் கிறிஸ்தவம்? என்பதை நாம் அறிந்துணர்ந்துகொள்ள வேண்டுமோ அந்தளவுக்கு இந்தப் போதனையையும் நாம் விளங்கிக்கொள்வது அவசியம். ஏனெனில் இவை இரண்டுமே ஒன்றுக் கொன்று பிரிக்கமுடியாத தொடர்புடையவை. முதலாவது இருந்தால் மட்டுமே இரண்டாவதை நாம் ஒரு மனிதனில் பார்க்க முடியும்.