நீதிமானாக்குதல்
திரும்பவும் ஒருமுறை . . .
கர்த்தர் தன்னுடைய கிரிபையின் மூலமாக தன்னால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு இயேசு கிறிஸ்து மூலம் இரட்சிப்பை அளித்தார். உலகத் தோற்றத்துக்கு முன்பாக திரித்துவ தேவனால் திட்டமிடப்பட்டு வரலாற்றில் கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட அந்த இரட்சிப்பில் ஒரு படிமுறை ஒழுங்கிருப்பதை வேதபோதனைகளில் இருந்து அறிந்துகொள்ளுகிறோம். இந்தப் படிமுறை ஒழுங்கில் அழைப்பு முதலிடத்தை வகிக்கிறது. அதற்கடுத்தபடியாக மறுபிறப்பும், அதையடுத்து மனமாற்றமும் இந்த ஒழுங்கின் அம்சங்களாகக் காணப்படுகின்றன. தத்துவ ரீதியில் இவற்றை இவ்வாறு ஆராய்ந்து படிக்கும்போது இரட்சிப்பைக் குறித்த ஆழமான அறிவைப் பெற்றுக்கொள்ள முடிகிறது. இந்தப் படிமுறை ஒழுங்கில் காணப்படும் கிருபைகள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைக்கிரமாக நிகழ்வதில்லை. இரட்சிப்பை அடைகின்ற மனித னில் இவையெல்லாம் ஒருசேர நிகழ்கின்றன. இருந்தபோதும் இரட்சிப்பாகிய கிருபையில் இத்தகைய ஒரு தத்துவார்த்த ஒழுங்கு காணப்படுகிற தென்பதையும், அவ்வொழுங்கில் அறிவுபூர்வமான ஒரு படிமுறை காணப்படுகின்றதென்பதையும் புரிந்துகொள்வது அவசியம். இவ்வொழுங்கில் காணப்படும் கிருபை வரிசைகள் இடம்மாறி அமைந்துவிட முடியாது என்பதையும் விளங்கிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இந்த வரிசையில் அழைப்புக்கு முன்னால் வேறு எதுவும் இடம்பெற முடியாது. அழைப்பை அடுத்தே மறுபிறப்பு இடம்பெறும்.