கேள்வி 103: முறையாக திருமுழுக்கு எவ்வாறு கொடுக்கப்பட வேண்டும்?
பதில்: கிறிஸ்து ஏற்படுத்தித் தந்துள்ள முறையின்படியும், அப்போஸ்தலர் களுடைய நடைமுறையின்படியும், பிதா, குமாரன், ஆவியானவரின் நாமத்திலே விசுவாசியின் சரீரம் முழுவதையும் தண்ணீரிலே அழுத்தி திருமுழுக்கு கொடுக்க வேண்டும். தண்ணீரை விசுவாசியின் மீது தெளிப்பதன் மூலமாகவோ, அவர்களுடைய சரீரத்தின் ஒரு பகுதியை மட்டும் தண்ணீரில் அழுத்துவதன் மூலமாகவோ திருமுழுக்கு கொடுக்கப்படக்கூடாது.
(மத்தேயு 3:16; யோவான் 3:23; அப்போஸ்தலர் 8:38-39).
திருமுழுக்கு கொடுக்க வேண்டிய சரியான முறை
திருமுழுக்கைக் குறிக்கப் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைக்கு (Baptidzo) ‘தண்ணீரில் அழுத்துதல் அல்லது தாழ்த்துதல்’ (dip, immerse, submerge) என்பதே பொருள். இந்த முறையிலேயே இந்த வார்த்தைக்கு கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் சமுதாயத்தில் அர்த்தம் கொண்டிருந்தார்கள். திருமுழுக்கு என்றால் அதற்கு தண்ணீரில் தாழ்த்துதல் என்று மட்டுமே பொருள்; வேறு பொருள் கிடையாது.