இந்த வருடம் ஜோன் நியூட்டன் (John Newton) கர்த்தரை அடைந்த இருநூறாவது வருடமாகும். இங்கிலாந்தில் அடிமை வியாபாரத்திற்கெதிராகப் போராடி வெற்றிகண்ட வில்லியம் வில்பர்போர்ஸ் (William Wiberforce) ஜோன் நியூட்டனின் நெருங்கிய நண்பர். இருவரும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள். இங்கிலாந்தில் அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்ட இருநூறாவது ஆண்டும் இந்த ஆண்டுதான். ஆராதனைப் பாடல்கள் எழுதிப் புகழ் பெற்ற வில்லியம் கவுப்பர் (William Cowper) ஜோன் நியூட்டனின் இன்னுமொரு நெருங்கிய நண்பர். இருவரும் இணைந்து பல பாடல் களை எழுதியுள்ளனர். கப்பல்களில் பணிபுரிந்து பின்பு அடிமை வியாபாரக் கப்பல்களில் வேலை செய்து தானும் அடிமையாகி பாவத்தையும், துன்பத்தையும் அவற்றின் அடிமட்டம்வரைப் போய் ருசிபார்த்து கர்த்தரை அறியாமல் வாழ்ந்த நியூட்டனை இறையாண்மையுள்ள கர்த்தர் தன்னுடைய கிருபையால் இரட்சித்துப் பயன்படுத்தினார். அவருடைய மனந்திரும்புதல் பற்றிய சாட்சி கர்த்தரின் அளப்பரிய கிருபையை உலகத்திற்கு இன்றும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நியூட்டன் எழுதிய நூல்களும், பாடல்களும் அவரை இன்றும் கிறிஸ்தவ உலகம் நினைவுகூரும்படிச் செய்துகொண்டிருக்கின்றன. இன்றைக்கும் கிறிஸ்தவர்களெல்லாம் பாரெல்லாம் கர்த்தரைப் பாடிப் புகழும் அவரெழுதிய “Amazing Grace How Sweet The Sound” என்ற பாடலை எவரால் மறக்க முடியும்.
ஜோன் நியூட்டன் (John Newton) 21ம் நாள் டிசம்பர் 1907ல் கர்த்தரிடம் சேர்ந்தார். இந்த வருடம் அவர் கர்த்தரை அடைந்த இருநூறாவது வருடமாகும். ஜோன் நியூட்டன் யார், அவரைப் பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும் என்று சிலர் எண்ணலாம். Amazing Grace என்ற பிரசித்திபெற்ற பாடலை எழுதியவர் ஜோன் நியூட்டன். இந்த வருடம் Amazing Grace என்ற அந்தப் பாடலின் தலைப்பில் நியூட்டனின் அருமை நண்பரான வில்லியம் வில்பர்போர்ஸைப் (William Wilberforce) பற்றிய ஒரு படத்தை ஹொலிவுட் தயாரித்து வெளியிட்டிருக்கிறது. இங்கிலாந்தில் அடிமை வியாபாரத்தை ஒழிப்பதற்கு எதிராகப் போராடி வெற்றிகண்டவர் வில்லியம் வில்பர்போர்ஸ். இந்த இருவருமே சீர்திருத்த சுவிசேஷ இயக்கக் கிறிஸ்தவர்கள் (Reformed Evangelical Christians). இந்த வருடம் வில்பர்போர்ஸ் அடிமை வியாபாரத்தை ஒழித்த இருநூறாவது வருடமும்கூட. ஜோன் நியூட்டன் சுவிசேஷ இயக்கப் படைப்பாளிகளில் முதன்மையானவர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த இருவரும் இன்னொரு பிரசித்திபெற்ற பிரசங்கியான ஜோர்ஜ் விட்பீல்டும் சுவிசேஷ இயக்கத்தை ஒன்றிணைத்து உலகமுழுவதும் சுவிசேஷம் பரவுவதற்கு சுவிசேஷ ஊழியத்தைப் பெலப்படுத்தினார்கள்.