எனக்கு நானே ராஜா!

வேத போதனைகளை எந்தளவுக்கு பலர் தப்பாக விளங்கிக் கொள்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைத் தரவிரும்புகிறேன். அநேக பாப்திஸ்து சபைகளிலும், சகோதரத்துவ சபைகளிலும் ஒரு போதகர் அல்லது மூப்பர் மட்டுமே சபைத் தலைவனாக இருந்து, எல்லோரையும் அதிகாரம் செலுத்தி வருவதை தமிழினத்துக் கிறிஸ்தவத்தில் எங்கும் காணலாம். அத்தோடு இந்த உள்ளூர் சபைகள் அத்தனையும் எங்கள் மீது எவரும் ஆட்சி செலுத்தக்கூடாது, நாங்கள் “சுயாதீன சபைகள்” என்ற கோரஸைப் பாடிக்கொண்டு தனக்குத் தானே இராஜாவாக இருந்து வருகின்றன. இத்தகைய எண்ணப் போக்கில் என்ன தவறு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்பது அவசியம்.

கர்த்தரின் வேதம் ஒவ்வொரு திருச்சபையும் தன்னைத்தானே ஆளூம் வசதிகளோடு இருக்கும்படி அறிவுறுத்துகிறது. அதாவது, வேதமுறைப்படி அமைந்த உள்ளூர் திருச்சபையில் ஒன்றுக்கு மேற்பட்ட போதகர்களும், உதவியாளர்களும் இருந்து திருச்சபை ஆளப்பட வேண்டும் என்பது இயேசு ஏற்படுத்தியிருக்கும் வழிமுறை. இதன்படி ஒரு சபையின் போதகர்களும், உதவியாளர்களும், அங்கத்தவர்களும் ஒருவருக்கொருவர் தங்களை ஒப்புக்கொடுத்து தங்களைக் கண்காணித்து வளர வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். பல போதகர்கள் அல்லது மூப்பர்கள் ஒரு சபையில் இருக்கும்படி கர்த்தர் எதிர்பார்ப்பதற்குக் காரணம் ஒரே போதகர் தானும் தவறு செய்து சபையையும் கெடுத்துவிடாமல் இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளத்தான். பல போதகர்கள் இருக்கும்போது அவர்கள் ஒருவருக்கொரு வர் தங்களை ஒப்புக்கொடுத்து இருதயங்களைக் காத்துக்கொள்ள முடியும். அவர்கள் ஒருவருக்கொருவர் accountable ஆக இருக்க வேண்டும். அதாவது ஒருவருக்கொருவர் கணக்குக்கொடுக்க வேண்டும். அப்படி அவர்கள் தங்கள் வாழ்க்கைக்கும், ஊழியத்துக்கும் ஒருவருக்கொருவர் கணக்குக் கொடுத்து நடந்துகொள்கிறபோதுதான் சபையாருக்கு அவர்கள் வேதத்தைப் போதித்து வழிநடத்தமுடியும்; சபையார் வேதபோதனைகளுக்குக் கட்டுப்படும்படி எதிர்பார்க்க முடியும். போதகர்கள் பொறுப்புணர்வோடு மற்றவர்களுக்குக் கணக்குக் கொடுத்து வாழ்ந்து சபையாருக்கு உதாரண புருஷர்களாக இருக்கும்போது எந்த சபை மக்களாவது அவர்களுடைய போதனைகளைப் பின்பற்றி நடக்காமல் இருப்பார்களா?

Continue reading