பிரசங்கத்தில் கிறிஸ்தவத் தமிழ்!

தமிழில் பிரசங்கிக்கிறவர்கள் அநேகர் இருக்கிறார்கள். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. இறையியல் போதனைகளைத் தெளிவாகக் கொடுக்கிற தமிழ் பிரசங்கிகளின் தொகை மிகக் குறைவு என்பது நமக்குத் தெரியும். அந்தக் குறை நிவர்த்தியாக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால விருப்பம் என்பதை திருமறைத்தீபம் வாயிலாகப் பல தடவைகள் தெரிவித்திருக்கிறேன். இந்த ஆக்கத்தில் அதைப் பற்றி மறுபடியும் கருத்துத் தெரிவிக்க நான் விரும்பவில்லை. இதில் தமிழில் பேசிப் பிரசங்கிப்பதைப் பற்றி மட்டும் விளக்க விரும்புகிறேன். அதுவும் இலகு தமிழில் மக்கள் கேட்டுப் புரிந்துகொள்ளும் வகையில் பேசிப் பிரசங்கிப்பதைப் பற்றியே வலியுறுத்த விரும்புகிறேன்.

ஒரு சிறப்பு வைபவத்தில் கலந்துகொள்ள எனக்கு அழைப்புக் கிடைத்தது. அந்த வைபவத்தில் ஒரு செய்தி கொடுக்கப்பட்டது. பேசியவர் அரைமணி நேரம் செய்தி கொடுத்தார். கூட்டத்தில் ஒருவனாக இருந்து அந்த செய்தியை நானும் கேட்டேன். பொதுவாகவே இன்றைய கூட்டங்களில் தரமான கிறிஸ்தவ செய்திகளைக் கேட்க வழியில்லை, ஆனால், அன்று அவருடைய செய்தியில் வேதசத்தியங்கள் நல்ல முறையில் விளக்கப்பட்டன. கூட்டத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்த சத்தியங்களை நினைவுபடுத்திக்கொள்ள அந்தச் செய்தி நிச்சயம் துணை செய்திருக்கும். அன்று அநேக இந்துக்களும் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். ஆனால், கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை ஏதோ உறுத்தியது. என்னால் இருக்கையில் அமைதியாக இருக்க முடியாதளவுக்கு அந்த உறுத்துதல் இருந்தது. என்னவென்று யோசித்துப் பார்த்ததில் அது செய்தி சம்பந்தமானது என்பதை என்னால் உணர முடிந்தது. செய்தியில் எந்தவிதமான தவறுமே இல்லை. அது கிறிஸ்தவ செய்திதான். கிறிஸ்தவர்களுக்கு பயனுள்ளதுதான். ஆனால், என் உறுத்துதல் செய்தி கொடுக்கப்பட்ட மொழிநடை சம்பந்தமானது.

Continue reading