கடந்த இதழில் மனித சித்தத்தின் நிலையைப் பற்றி ஆராய ஆரம்பித்து, ஏதேன் தோட்டத்தில் நமது முதல் பெற்றோர் பாவமற்ற நிலையில் இருந்தபோது, மனித சித்தம் எந்த நிலையில் அவர்களில் காணப்பட்டது என்பதைப் பார்த்தோம். அங்கே பாவத்தால் பாதிக்கப்படாத நிலையில், பூரணமாய் இருந்த நிலையில் மனித சித்தம் முழுச் சுதந்திரத்தோடு கடவுளின் ஆணைகளை விரும்பிச் செய்துகொண்டிருந்தது என்பதை அறிந்துகொண்டோம். ஆதாமும், ஏவாளும் அங்கே நன்மையை மட்டுமே செய்து வாழ்ந்து வந்தார்கள். கடவுளோடு இடையராத ஐக்கியத்தை அனுபவித்து வந்தார்கள். அத்தகைய அருமையான வாழ்க்கை எப்படி மாறியது, அவர்கள் தங்களுடைய பூரணமான நிலையில் இருந்து விழுந்தபோது மனித சித்தத்தின் நிலைக்கு என்ன நடந்தது என்பதற்கெல்லாம் நாம் விடை காண வேண்டும். அதைத்தான் இந்த ஆக்கத்தில் நாம் ஆராயப் போகிறோம்.
மனிதன் பாவத்தில் வீழ்ந்தான்
படைக்கப்பட்ட நிலையில் ஆதாம் பூரணமாக இருந்தபோதும் அந்த நிலையில் இருந்து விழுந்துவிடக்கூடியவனாக இருந்தான். அந்த நிலையிலேயே அவன் படைக்கப்பட்டிருந்தான். அவன் கடவுளின் வார்த்தையை மீறி நடந்தால் தன்னுடைய பூரண நிலையை இழந்துவிடக்கூடிய சாத்தியம் இருந்தது. அவன் தன்னுடைய பூரண நிலையில் தொடர்ந்து வாழ்ந்திருந்திருக்க முடியும். அதற்கு எந்தத் தடையும் இருக்கவில்லை. ஆனால், கடவுளுடைய கட்டளையை அவன் மீறாமல் இருக்க வேண்டிய கடமைப் பொறுப்பு அவனுக்கிருந்தது. ஆனால், ஆதாமும், ஏவாளும் சாத்தானின் பேச்சைக் கேட்டு கடவுளின் கட்டளையை மீறினார்கள். எது நடந்திருக்கக்கூடாதோ அது அன்று ஏதேன் தோட்டத்தில் நடந்தது. அருமையானதொரு வாழ்க்கையைத் தொடர முடியாதபடி நமது முதல் பெற்றோர் பாவம் செய்தார்கள்.