சொல்ல வேண்டியவிதத்தில் சொல்லுவோம் சுவிசேஷம்

நீங்கள் யாரோடாவது கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ளவோ அல்லது பிரசங்கம் செய்யவோ முயற்சிப்பீர்களாயின் அந்தச் செய்தியை நியாயப்பிரமாணத்தின் அடிப்படையில் விளக்காவிட்டால் அது மெய்யான சுவிசேஷ செய்தியாக இருக்கமுடியாது. இன்னொரு வகையில் சொல்லப்போனால் நியாயப்பிரமாணம் இல்லாமல் நீங்கள் சுவிசேஷ செய்தியை சொல்லமுடியாது. சுவிசேஷத்தின் அடித்தளம் நியாயப்பிரமாணம் அல்ல; கிறிஸ்து மட்டுமே. இருந்தபோதும் ஒரு தனி மனிதன் கிறிஸ்துவிடம் நிச்சயம் வரவேண்டும் என்று அவனைப் பார்த்து நீங்கள் சொல்லுவதற்கு நியாயப்பிரமாணம் நிச்சயம் அவசியம். இதை நான் தெளிவாக விளக்குவது அவசியம்.

பிரசங்க இளவரசன் என்று அழைக்கப்பட்ட ஸ்பர்ஜன் இதுபற்றி சொல்லியிருப்பதைக் கவனியுங்கள், ‘எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தைப் பிரசங்கம் செய்யாமல் சுவிசேஷம் சொல்ல முடியும் என்று நான் நம்பவில்லை. நியாயப்பிரமாணம் தான் ஊசி; ஒரு மனிதனுடைய இருதயத்தில் சுவிசேஷமாகிய பட்டுநூலைத் தைக்கவேண்டுமானால் நியாயப்பிரமாணமாகிய ஊசியை முதலில் அவனுடைய இருதயத்துக்குள் நுழைக்காமல் அதைச் செய்ய முடியாது. நியாயப்பிரமாணத்தை ஒரு மனிதன் புரிந்துகொள்ளவில்லையென்றால் அவன் தான் பாவியென்பதை உணரமாட்டான். அவர்கள் மனப்பூர்வமாக இருதயத்தில் பாவிகளாக உணராவிட்டால் பாவங்களுக்காக செலுத்தப்பட்ட பலியின் மகத்துவத்தை உணர மாட்டார்கள். நியாயப்பிரமாணத்தால் முதலில் காயப்படாதவனுக்கு குணமாவதற்கு வழியில்லை. நியாயப்பிரமாணம் அவனைக் கொல்லாவிட்டால் அவன் உயிர்ப்பிக்கப்படுவதற்கு இடமில்லை.’ ஸ்பர்ஜனின் வார்த்தைகள் பொன்னானவை.

Continue reading