வாலிப நாட்களை அலட்சியம் செய்யாதீர்கள்!

அடிக்கடி வாலிபர்களுக்காக எதையும் தனிப்பட்ட முறையில் எழுத மாட்டீர்களா என்று அநேகர் கேட்டிருக்கிறார்கள். சிறுவர்களுக்கு, பெரியவர்களுக்கு, வாலிபர்களுக்கு என்றெல்லாம் தனித்தனியாக நான் பிரித்து எழுதுவதில்லை. வேதபோதனைகள் எல்லாமே எல்லோருக்கும் உரியவை. அந்தப் போதனைகளை அந்தந்த வயதைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்றமுறையில் விளக்கிப் போதிப்பதே போதகனின் கடமை. இருந்தாலும் நம்மினத்துப் பண்பாட்டைப் பொறுத்தவரையில் அது மேலை நாட்டுப் பண்பாட்டைப்போலல்லாமல் வேறுபட்டு மேலை நாட்டவர்கள் புரிந்துகொள்ள முடியாத நிலையில் பலவிதமான புறஜாதிப் பாரம்பரியங்களாலும், சடங்குகளாலும் பாதிக்கப்பட்டு, சில வேளைகளில் எது சரி, எது தவறானது என்று பிரித்துப் பார்க்கவும் கஷ்டமான நிலையில் இருப்பதால், அதில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகின்ற நம்மினத்து வாலிபர்களுக்கு தனியாக அந்த விஷயங்களைப் பற்றி எழுதி உணர வைக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன்.

நானும் தமிழனாகப் பிறந்து, வளர்ந்திருப்பதாலும் நம்மினத்து இந்துப் பாரம்பரிய, சடங்குகள், பண்பாட்டுச் சீரழிவுகளை அக்குவேறு ஆணிவேறாக அறிந்தும் உணர்ந்துமிருப்பதாலும், அதற்கெதிராகவெல்லாம் கிறிஸ்துவுக்குள்ளாக கிருபையை அடைந்த நாளிலிருந்தே எதிர்த்து நின்று வேத சட்டம் மட்டுமே கிறிஸ்தவனுக்கு சட்டமாக இருக்க வேண்டும் என்ற உறுதியோடு எல்லா சந்தர்ப்பங்களையும் சந்தித்து வந்திருப்பதாலும், நம்மினத்து வாலிபர்களுக்கு அவர்கள் வாழ வேண்டிய முறையைப் பற்றியும், வாழ்க்கையில் சந்திக்க வேண்டிய அனுபவங்களைப் பற்றியும் விளக்குவது எனக்கு கடினமான காரியமல்ல.

Continue reading