பெற்றோரின் கடமைகள் – ஜே.சீ. ரைல்

பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து. அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். – நீதி 22:6

வேதவசனங்களில் தேர்ந்த கிறிஸ்தவர்கள் எல்லோருமே இந்த வசனத்தை நன்றாக அறிந்திருப்பார்கள் என்று நம்புகிறேன். நமக்குப் பழக்கப்பட்ட ஒரு இனிமையான பாடலைப்போல அது உங்களுடைய காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இந்த வசனத்தை நீங்களே அநேக தடவை கேட்டிருப்பீர்கள், படித்திருப்பீர்கள், இதைக் குறித்துப் பேசியுமிருப்பீர்கள். இதை மேற்கோளாகக்கூட காட்டியிருப்பீர்கள். இல்லையா? ஆனால், இதன் பொருளுக்கு எந்தளவுக்கு மதிப்புக்கொடுத்து பின்பற்றியிருக்கிறீர்கள்? இந்த வசனத்தில் அடங்கியுள்ள ஆழமான வேத போதனையை நன்றாக அறிந்து வைத்திருப்பவர்கள் கொஞ்சப்பேரே. இந்த வசனம் சுட்டிக் காட்டுகின்ற கடமையை நடைமுறையில் செயல்படுத்துகிறவர்கள் எத்தனை பேர் என்று பார்ப்போமானால் அது நமக்கு அதிர்ச்சியைத் தருவதாயிருக்கும். என்ன, வாசகர்களே, நான் கூறுவது உண்மைதானே?

இந்த விஷயம் இதுவரை யாருமே அறிந்திராத புதிய விஷயம் என்று சொல்வதற்கில்லை. உலகம் எவ்வளவு பழமையானதோ அந்தளவுக்கு பழமை வாய்ந்த விஷயம் இது! உலகம் தோன்றி ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகள் கடந்து போயிருக்கின்றன. அது நமக்குக் கற்றுந்தந்திருக்கும் அனுபவபாடங்கள் ஏராளம்! இப்போது நாம் பலவிஷயங்களைக் கற்றுக்கொள்ளுவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ள காலப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உலகமெங்கும் புதிய புதிய பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. படிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும் புதிய புதிய கல்வி கற்பிக்கும் முறைகளும், புதுப்புது பாடத்திட்டங்களும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. இவ்வளவும் இருந்தபோதும் பிள்ளைகளை நடக்க வேண்டிய வழியிலே நடத்துவதற்கான எந்தத் திட்டமும் உருவானதுபோல் தெரியவில்லை. ஏனென்றால், அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்போது யாருமே கடவுளோடு இணைந்து நடக்கிறவர்களாகத் தெரியவில்லையே.

Continue reading