(புதிய நூலான ‘கிறிஸ்தவ வினா விடைப் போதனைகள்’ வெளிவந்திருக்கின்றது. அதன் அவசியத்தையும் பயன்பாட்டையும் இந்த ஆக்கத்தில் வலியுறுத்தி விளக்கியிருக்கிறோம். இது நூலில் அறிமுகவுரையாக வந்திருக்கின்றது. – ஆசிரியர்.)
வினா விடைப் போதனை தமிழ் கிறிஸ்தவ உலகிற்கு பெரும்பாலும் புதியது. ஆரம்ப கால மிஷனரிகளான வில்லியம் கேரி, சீகன்பால்கு போன்றோர் கீழைத்தேய நாடுகளில் அதை அறிமுகப்படுத்தியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இருந்தபோதும் திருச்சபைகளில் அவை நிலைகொள்ளவில்லை. இன்றைக்கு வாக்குத்தத்த வசனங்களும், தியானச் செய்திகளும் மட்டுமே திருச்சபைகளை அலங்கரித்து சத்தான போதனைகள் ஆத்துமாக்களை அடைய முடியாதபடி மறைக்கப்பட்டு வருகின்றன. இது திருச்சபையின் ஆத்தும வளர்ச்சிக்கு அறிகுறியாகாது. பல வருடங்களுக்கு முன்பாக சிறுவர்களுக்கான சிறிய வினா விடைப் போதனையை வெளியிட்டிருந்தோம். அதற்கு நல்ல வரவேற்பிருந்தது. பல சபைகள் அதை ஞாயிறு பாடசாலைகளிலும், கிறிஸ்தவர்கள் குடும்ப ஆராதனையிலும் பயன்படுத்திப் பலனடைந்தார்கள். அது தொடர்ந்தும் அச்சில் இருந்து வருகின்றது.