பவுல்: துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும் நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா (2 தீமோத்தேயு 4:13).
வாசிப்பு மனிதனை முழுமையாக்கும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். வாசிப்பு மனிதனை முழுமையாக்குகின்றதோ இல்லையோ நிச்சயம் மனிதனுக்கு அறிவைக்கொடுக்கும்; அனுபவத்தை அளிக்கும். அது அவனை சிந்திக்க வைக்கும் ஒரு விஷயத்தை ஆராய வைக்கும்; அதுபற்றி சாதகமாகவோ பாதகமாகவோ கருத்துத் தெரிவிக்க வலியுறுத்தும். வாசிக்கின்ற மனிதன் பல விஷயங்களை வாழ்க்கையில் அறிந்துகொள்ளுகிறான். பல விஷயங்களைப் பற்றிய கருத்துக்களைக் கொண்டவனாக இருக்கிறான்.
வாசிக்காதவர்களால் சிந்திக்க வழியில்லை. விஷயங்களைத் தெரிந்துகொள்ளாமலிருந்தால் அதுபற்றி எப்படி சிந்திப்பது? எப்படி ஒரு கருத்தைக் கொண்டிருப்பது? அந்தக் கருத்தை எப்படி வெளிப்படுத்துவது? வாசிக்கும் வழக்கம் இல்லாவிட்டால் நம்மால் தெளிவான, முதிர்ச்சியான சம்பாஷனை செய்யமுடியாது. முட்டாள்களைப்போலத்தான் பேசிக்கொண்டிருக்க முடியும். வாசிக்காதவர்களுக்கு பல விஷயங்களில் அறிவு இருக்க வழியில்லை. அவர்கள் அறிவில்லாதவர்களாக இருப்பார்கள்; வளருவார்கள். அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் அவர்களால் எந்தப் பயனுமிருக்காது. வாசிக்காதவர்களுக்கு ஒரு விஷயத்தைப் பற்றிக் காரணகாரியங்களோடு ஆராய்ந்து தெளிவான விளக்கங்கொடுக்க முடியாது. அவர்களுடைய பேச்சு அறிவு சார்ந்ததாக இல்லாமல் அசட்டுத்தனமானதாக இருந்துவிடும். இப்போது தெரிகிறதா எந்தளவுக்கு வாசிப்பு அவசியம் என்று? அதனால்தான் அப்போஸ்தலன் பவுலும் சிறையிலிருக்கும்போது வேதப்புத்தகத்தையும், ஏனைய அவசியமான நூல்களையும் கொண்டுவரும்படித் தன் நண்பர்களுக்கு எழுதியிருக்கிறார்.