பத்திரிகையின் கடந்துபோன இந்த இருபது வருடங்களில் நான் நினைத்துப் பார்த்துக் குறிப்பிட வேண்டிய பல பேரிருக்கிறார்கள். அவர்களில் பலரை நான் பத்திரிகை மூலமாகத்தான் சந்தித்தேன். பலரோடு ஏற்கனவே இருந்த உறவை பத்திரிகை நெருக்கமாக்கியிருக்கிறது. அவர்களுடைய உண்மைப் பெயரை வெளியிட்டு அவர்களை நான் சங்கடப்படுத்த விரும்பவில்லை. அதனால் அவர்களுக்கு புனைப் பெயரைக்கொடுத்தே எழுதப்போகிறேன். இவர்களுடைய சத்திய வேட்கையும், இலக்கியத் தாகமுந்தான் இவர்களை என்னோடு நெருக்கமாக்கியிருக்கிறது. பொதுவாகப் பணத்தை முதன்மைப்படுத்தி சுயநல நோக்கோடு இயங்கி வரும் தமிழினக் கிறிஸ்தவத்தில் இவர்கள் அழுக்கில்லாத முத்தாக இருந்து வருகிறார்கள். இவர்கள் வாசிப்பதோடு சிந்திக்கவும் செய்கிறார்கள். தமிழினக் கிறிஸ்தவத்தில் பொதுவாக அதைப் பார்ப்பது அரிது. சீர்திருத்த கிறிஸ்தவத்தில் இவர்களுக்கு அதிக வாஞ்சையிருக்கிறது. அதை வெறும் இறையியல் போதனையாக மட்டும் இவர்கள் பார்க்கவில்லை. தங்களுடைய வாழ்க்கைக்கு அவசியமான வேத இறையியலாகப் பார்த்து நடைமுறையில் அதன்படி வாழ முயற்சி செய்து வருகிறவர்கள். இவர்களுடைய சந்திப்பும், உறவும் என்னைத் தொட்டிருக்கிறது. இவர்களை நண்பர்களாகக் கொண்டிருப்பதற்கு நான்தான் பெருமைப்பட வேண்டும். இவர்களிடம் நான் பார்த்ததும், கற்றதும் அநேகம். திருமறைத்தீபம் எங்களை இணைத்து உறவை நெருக்கமாக்கி வளர்த்திருக்கிறது என்பதை எண்ணும்போது கண்கள் கலங்கத்தான் செய்கின்றன. கர்த்தரில்லாமல் எதுவுமில்லை என்பதை இந்த நெஞ்சங்கள் உணர்த்துகின்றன.