1. சிலபேர் சொல்லுவதுபோல், விசுவாசிகளின் பரிசுத்தம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த முயற்சிகள் எதுவுமில்லாமல் விசுவாசத்தின் மூலம் மட்டும் கிடைக்கிறதா?
பரிசுத்தத்தின் ஆரம்பம் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தில் ஆரம்பிக்கிறது என்பதை வேதம் தெரிந்த எந்தக் கிறிஸ்தவனும் மறுக்கப்போவதில்லை. கிறிஸ்துவை விசுவாசிக்கும்வரை பரிசுத்தமாகுவதற்கு வழியே இல்லை. அதேவேளை இந்த ஒரு விஷயத்தில் கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தோடு விசுவாசியின் தனிப்பட்ட செயல்களும் அவசியம் என்பதை வேதம் நிச்சயமாக விளக்குகிறது. ‘தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்’ (கலா 2:20) என்று எழுதிய பவுலே, ‘என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்’ (என் சரீரத்தை அடக்கி எனக்கு அடிமையாக்குகிறேன்) என்றும் சொல்லியிருக்கிறார். வேதத்தின் வேறொரு இடத்தில் பவுல், ‘நம்மை சுத்திகரித்துக் கொண்டு பூரணப்படுத்தக்கடவோம்’ (2 கொரி 7:1) என்று விளக்கியிருக்கிறார். எபிரெயருக்கு எழுதியவர், ‘ஜாக்கிரதையாயிருப்போம்’ (எபி 4:11) என்றும், ‘பொறுமையோடு ஓடக்கடவோம்’ (எபி 12:1) என்றும் எழுதியிருக்கிறார். [தமிழ் வேதத்தில் (ப.தி.) பின்வரும் வசனங்கள் எழுத்துபூர்வமாக பின்வரும் விதத்தில் இருந்திருக்க வேண்டும். எபி 4:11 ல், ‘நாம் கடினமாய் உழைப்போம்’ என்றும்; எபி 12:1ல், ‘விடாமுயற்சியோடு ஓடக்கடவோம்’ என்றிருந்திருக்க வேண்டும். – ஆர்]