இந்த இதழைப்பற்றி ஒரு வார்த்தை . . .

இந்த இதழுக்கான ஆக்கங்களைத் தயாரிக்க ஆரம்பித்தபோது முதலில் ஜே. சி. ரைலின் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய ஆக்கத்தை வெளியிடத் தீர்மானித்தேன். பின்பு அந்த ஆக்கத்தை வாசகர்கள் இறையியலடிப்படையில் விளங்கிக்கொள்ள உதவுமுகமாக நான் ஒரு ஆக்கத்தை எழுதினேன். அதற்குக் காரணம் ரைல், ‘விசுவாசத்தைக் கொண்டிருந்தும் முழு நிச்சயத்தை வாழ்க்கையில் அடையாமல் ஒருவர் பரலோகத்தை அடைந்துவிடலாம்’ என்று விளக்கியிருப்பதுதான். அது 1689 விசுவாச அறிக்கையும் (அதி. 18) அளிக்கும் போதனை. இதைப் பியூரிட்டன் பெரியவர்கள் 17ம் நூற்றாண்டில் அதிகம் விளக்கிப் போதித்திருக்கிறார்கள். 19ம் நூற்றாண்டில் இறையியல் போதனைகளில் உருவான மாற்றங்கள் பாவம் மற்றும் இரட்சிப்பு பற்றிய போதனைகளை வேறு திக்கில் கொண்டுபோய் இரட்சிப்பின் நிச்சயம் பற்றிய போதனைகளை இருட்டடிப்புச் செய்துவிட்டன. என்னுடைய ஆக்கம் வேதபூர்மான பியூரிட்டன் பெரியவர்கள் அளித்துள்ள விளக்கங்களின் அடிப்படையிலானது. இந்த இரு ஆக்கங்களையும் விளங்கிக்கொள்ளத் துணையாக 1689 விசுவாச அறிக்கையின் 18ம் அதிகாரம் இதில் வந்திருக்கிறது.

அத்தோடு ஜெரமி வோக்கரின், ‘யார் மெய்யான கிறிஸ்தவன்?’ என்ற ஆக்கத்தை வெளியிடத் தீர்மானித்தேன். பியூரிட்டன் பெரியவர்களில் ஒருவரான கார்டினர் ஸ்பிரிங் (Gardiner Spring) எழுதிய ‘கிறிஸ்தவனின் தனித்துவமான குணாதியங்கள்’ (The Distinguishing Traits of Christian Character) என்ற நூலின் முக்கிய பாகத்தை அடிப்படையாக வைத்து தன்னுடைய ஆக்கத்தை ஜெரமி வோக்கர் எழுதியிருக்கிறார். கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் தவறாது வாசிக்கவேண்டிய கிறிஸ்தவ இலக்கியம் (Christian classic). அது இன்றும் ஆங்கிலத்தில் அச்சில் இருந்து ஆங்கிலமொழி அறிந்த விசுவாசிகளுக்கு பயனளித்து வருகிறது. தவறான மருந்தைக் குடித்துக் கலங்கிப் போயிருக்கிற வியாதியஸ்தனுக்கு நல்ல வைத்தியமளித்தால் அவனுக்குப் புத்துயிர் ஏற்படுவதுபோல், கார்டினர் ஸ்பிரிங்கின் நூல் கிறிஸ்தவம் என்ற பெயரில் போலித்தனமாக பவனிவரும் மாயமானின் கையில் அகப்பட்டு ஆவிக்குரிய சிக்கலுக்குள்ளாகியிருக்கிறவர்களுக்கு புத்துயிர் கொடுக்கும் ஆவிக்குரிய அரிய மருந்து. அதை வாசிக்க வசதியில்லாதவர்களுக்கு ஜெரமி வோக்கரின் ஆக்கம் ஓர் அன்பளிப்பு.

Continue reading