கேள்விப்பட்டிருக்கிறீர்களா? – இரட்சிப்பின் நிச்சயம் –

இரட்சிப்பின் நிச்சயம் (Assurance of Salvation) என்ற வேதபோதனை பற்றி நம்மினத்துக் கிறிஸ்தவர்களிடம் எந்தளவுக்கு வேதஞானம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. இதுபற்றிய விளக்கமான போதனைகள் பரவலாகக் கொடுக்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன். என்னுடைய போதகப் பணியில் ‘இரட்சிப்பின் நிச்சயம்’ குறித்து சந்தேகம் கொண்டிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். ‘நான் உண்மையிலேயே இரட்சிப்பை அடைந்திருக்கிறேனா’ என்ற சந்தேகந்தான் அது. அந்த சந்தேகத்தோடேயே அநேக நாட்கள் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களையும் நான் சந்தித்திருக்கிறேன்; ஆலோசனைகள் அளித்திருக்கிறேன்.

Beekeஇரட்சிப்பின் நிச்சயம் பற்றிய ஞானம் கிறிஸ்தவர்களுக்கு மிக அவசியமானது. அது கிறிஸ்தவ அனுபவம். கிறிஸ்தவர் அல்லாதவர்களிடம் அதைக் காணமுடியாது. அதுபற்றி ஓர் ஆக்கத்தில் எழுதியிருக்கும் ஜொயல் பீக்கி எனும் சீர்திருத்தவாத போதகர், ‘இன்றைய தலைமுறையினரிடம் இரட்சிப்பின் நிச்சயம்பற்றிய போதனை அதிகமாக இருப்பதல்ல பிரச்சனை; அது இருக்கிறதா என்று சந்தேகப்படும் விதத்தில் அருகிக் காணப்படுவதே பிரச்சனை’ என்று எழுதியிருக்கிறார். இரட்சிப்பின் நிச்சயமாகிய  அனுபவத்தை இன்றைய கிறிஸ்தவர்கள் அதிகம் நாட வேண்டும் என்று கூறும் அவர், ‘அது இருக்கும்போதுதான் ஆவிக்குரிய வாழ்க்கையில் நாம் வளர  முடியும், உயர முடியும்’ என்கிறார். ‘தங்களில் இரட்சிப்பின் நிச்சயத்தைக் கொண்டிருக்கிறவர்களே சிறுபிள்ளைகளுடைய இருதயத்தைக் கொண்டிருந்து கர்த்தரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவார்கள்; எழுப்புதலுக்காக ஜெபிப்பார்கள்; இயேசு மத்தேயு 28ல் கொடுத்திருக்கும் கட்டளையை நிறைவேற்ற சுவிசேஷ வாஞ்சையோடும் ஊக்கத்தோடும் பாடுபடுவார்கள்; பரலோகத்தையும் தங்களுடைய வீடாக எண்ணி இவ்வுலகில் வாழ்வார்கள்’ என்றும் பீக்கி எழுதுகிறார் (Masters Journal, Spring 1994, Pgs 43-71). இந்தப் போதனை நம்மினத்தில் தெளிவாகப் போதிக்கப்படாததால் அதுபற்றி ஜே. சி. ரைல் எழுதிய ஓர் ஆக்கத்தின் மொழிபெயர்ப்பு இந்த இதழில் வந்திருக்கிறது. அந்த ஆக்கத்தை வாசகர்கள் இறையியல் குழப்பமில்லாமல் புரிந்துகொள்ளுவதற்கு வசதியாக இந்த ஆக்கத்தை எழுதியிருக்கிறேன்.

Continue reading