இது என்ன வித்தியாசமான தலைப்பாக இருக்கிறதே என்று கேட்கிறீர்களா? உங்கள் கேள்வி ஆச்சரியம் தரவில்லை. முதன் முதலாக சமீபத்தில் இதை உணர்ந்து நானே ஆச்சரியப்பட்டேன். பத்துக்கட்டளைகளை 2013ல் இருந்து பிரசங்கித்து வரும் நான், சமீபத்தில் எட்டாம் கட்டளையை ஆரம்பித்தேன். அந்தக் கட்டளையில், செய்யக்கூடாத காரியங்களை ஆண்டவர், ‘திருடாதே’ (களவு செய்யாதிருப்பாயாக) என்ற வார்த்தை மூலம் பொதுவாக சுருக்கமாக விளக்கியிருக்கிறார். உண்மையில், செய்யக்கூடாதவற்றை மட்டும் அந்த வார்த்தைகள் விளக்காமல், செய்யவேண்டியவற்றையும் விளக்குகின்றன. மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அந்தக் கட்டளைகளில் உள்ள அனைத்தும் நம் பார்வைக்கும் அறிவுக்கும் புலப்படுவதில்லை. ஆழமாக நிதானத்தோடு வேதத்தை வேதத்தோடு ஆராய்ந்து படிக்கும்போது அநேக உண்மைகளை ஆவியானவர் அறியவைக்கிறார்.