– திருமறைத்தீபம் 20ம் ஆண்டு நிறைவு விழா –
கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி பெங்களூரில் திருமறைத்தீபத்தின் 20ம் ஆண்டு நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. கெம்பஸ் குருசேட் நிறுவனத்தின் மிகப்பெரிய கட்டடத்தில் கூட்டத்தை பெங்களூர் சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர். அங்குபோனபோதே இத்தனைப் பெரிய இடத்தை எப்படி நிரப்பப்போகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. அதுவும் பெங்களூரில் அன்று போக்குவரத்து நெருக்கடி மற்ற நாட்களைவிட அதிகம். கூட்டம் நடந்த இடத்துக்குப் போய்ச்சேருவதற்கே ஒன்றரை மணிநேரம் எடுத்தது. கூட்டம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆதங்கம் வேறு உள்ளுக்குள். வருகிறவர்களை வரவேற்று உபசரித்து இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்வது போன்ற பணிகளையும், புத்தகங்கள் விற்பனை செய்வது, உணவு பரிமாறுவது போன்றவற்றையும் செய்வதற்காக இருபது பேருக்கு மேற்பட்ட சகோதரர்கள், திருமறைத்தீப 20ம் ஆண்டு விழாவை சிறப்பிப்பதற்காக வெளியிடப்பட்டிருந்த, மஞ்சள் நிறத்தில் ஸ்பர்ஜன் அவர்களின் வார்த்தைகளைக்கொண்டிருந்த நீல நிற டீ-சேர்ட்டை அணிந்து சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் பெங்களூரையும், தமிழகத்தின் திருச்சபைகளையும் சேர்ந்த சகோதரர்கள் என்பதைக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. பெங்களூர் சபையினர் பெரிய ஏற்பாடுகளைச் செய்திருப்பது மட்டுமல்ல ஒழுங்கோடு கூட்டத்தை நடத்தும் வகையிலும் திட்டமிட்டு செயல்படுகிறார்கள் என்பதும் பார்த்த உடனேயே தெரிந்தது.