கீழ்ப்படிவின் தேவகுமாரன்

கிறிஸ்துவின் பாவநிவாரணபலி மகத்தானது. மீட்பின் நிறைவேற்றத்துக்கு எந்தளவுக்கு அது கட்டாயமானதாக, அவசியமானதாக இருக்கிறது என்று வேதம் சுட்டுவதை ஏற்கனவே கவனித்திருக்கிறோம். இனி அந்தப் பாவநிவாரணபலிபற்றி வேதம் கொடுக்கும் விளக்கங்களை ஆராய்வோம். அந்த விளக்கங்களை வேதம் ஒரே பகுதியில் தராமல் பல்வேறு பகுதிகளில் பரவலாகத் தந்திருப்பதால் அவற்றையெல்லாம் முறையாகத் தொகுத்து ஆராய்வது அவசியமாகிறது. பாவநிவாரணபலியைப்பற்றி வேதம் விளக்கும்போது சில முக்கியமான பதங்களைப் பயன்படுத்தி அதுபற்றிய ஆழமான சத்தியங்களை விளக்குவதைப் பார்க்கிறோம். அத்தகைய பதங்களாக பலி, கோபநிவாரணபலி, ஒப்புரவாக்குதல், மீட்பு ஆகியவை இருப்பதைக் கவனிக்கிறோம். கோபநிவாரணபலி என்ற வார்த்தையை நாம் தமிழ் வேதத்தில் காணமுடியாது. அது நான் உருவாக்கியிருக்கும் பதம். Propitiation என்று ஆங்கிலப் பதத்தை தமிழ் வேதம் (பழைய திருப்புதல்) கிருபாதாரபலி என்று மொழிபெயர்த்திருக்கிறது. இந்த வார்த்தை Propitiation என்ற பதத்திற்கான சரியான மொழிபெயர்ப்பு இல்லை. கிரேக்க வார்த்தையில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ள அந்த ஆங்கில வார்த்தையின் சரியான மொழிபெயர்ப்பு கோபநிவாரணபலி என்பதே. அதுவே Propitiation என்ற பதம் விளக்கும் அடிப்படை உண்மைகளை வெளிக்கொணருவதாக இருக்கிறது. இது தவிர ஒப்புரவாக்குதல், மீட்பு ஆகிய பதங்களும் கிறிஸ்து நிறைவேற்றிய பாவநிவாரணபலியில் அடங்கிக் காணப்படும் ஆழமான உண்மைகளை வெவ்வேறு கோணத்தில் விளக்குகின்றன. இவையெல்லாவற்றையும் உள்ளடக்கி விளக்கக்கூடிய ஒரு பதத்தை நாம் வேதத்தில் தேடிப்பார்த்தால் நமக்குக் கிடைக்கும் வார்த்தையாக ‘கீழ்ப்படிவு’ அமைகின்றது.

Continue reading