என்ன பூக்கடைக்குப் போயிருக்கிறீர்களா, என்று கேட்பதுபோல் கேள்வி இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? பூக்கடைக்குப் போய்வருவது நமக்கு சகஜந்தானே; புத்தகக்கடைக்குப் போவதுதான் நமக்கு வழக்கத்திலேயே இல்லாததொன்று. புத்தகக்கடைக்குப் போவது எனக்குப் பூக்கடைக்குப் போய்வருவதுபோன்ற அனுபவத்தை அளிக்கிறது. விதவிதமான பூக்களைப் பார்த்தும், அவற்றின் மணத்தை நுகர்ந்தும் மகிழ்வதுபோல்தான் நான் புத்தகங்களை அனுபவிக்கிறேன். பூக்களைப் புத்தகங்களோடு ஒப்பிடுவதும் ஒருவிதத்தில் நல்லதுதான். எத்தனை நறுமணத்தைப் பூக்கள் தந்தாலும் புத்தகங்களைப்போல எண்ணங்களைப் பூக்களால் பகிர்ந்துகொள்ள முடியுமா? பூக்கள் கண்களுக்கும், நாசிக்கும் விருந்தளிக்கின்றன; புத்தகங்கள் இருதயத்துக்கும், அறிவுக்கும், ஆவிக்கும் விருந்தளிக்கின்றன. பூக்கடை எனக்குப் பிடிக்கும்; புத்தகக்கடை அதைவிட எனக்குப் பிடிக்கும். இதென்னடா, இந்த ஒப்பீட்டுக்கு ஓர் ஆக்கமா என்று நினைத்து தொடர்ந்து வாசிக்காமல் இருந்துவிடாதீர்கள். சில புத்தகக்கடைகளுக்கு சமீபத்தில் போய்வந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளத்தான் இந்தப்பீடிகை!