தமிழில் வேதமொழிபெயர்ப்பு: அவசியமான ஓர் அலசல்

‘தமிழ் வேதத்தில் காணப்படும் குறைபாடுகளை இன்றைய கிறிஸ்தவர்களிடம் சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்’ என்று நண்பர் ஒருவர் சமீபத்தில் சொன்னார். பெரும்பாலும் இன்று எல்லோரும் பயன்படுத்திவரும், பழைய திருப்புதல் தமிழ் வேதாகமத்தில் காணப்படும் குறைபாடுகளைப்பற்றி இதழில் ஏற்கனவே சில தடவைகள் எழுதியிருக்கிறேன். இன்று நேற்றென்றிராமல் தமிழ் கிறிஸ்தவர்கள் வேதமொழிபெயர்ப்பு என்று ஆரம்பித்தபோதெல்லாம் எதிர்ப்புக்காட்டி வந்திருக்கிறார்கள் என்று நம்மிடம் இருக்கும் வரலாற்று ஆவணங்கள் சொல்லுகின்றன. பெப்ரீஷியஸ், இரேனியஸ், பேர்சிவெல், பவர், லார்சன், மொனஹன் என்று வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டவர்களெல்லாம் இந்த எதிர்ப்பை சந்தித்திருக்கிறார்கள். இவர்கள் எல்லோருடைய மொழிபெயர்ப்பும் சிறந்ததென்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும் இவர்களுடைய முயற்சியையும், உழைப்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. இன்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் வேதாகமத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறபோது அதை வேதநிந்தனையாகவோ அல்லது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு வேதத்தின் மீதிருக்கும் நம்பிக்கையைக் குறைவுபடுத்தும் முயற்சியாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது. அந்த ஆபத்து இருக்கிறது என்பது நான் அறிந்ததுதான். இதற்காக நல்ல தமிழில், மூலமொழிகளான எபிரெய, கிரேக்க மொழிகளைச் சார்ந்து புதிய மொழிபெயர்ப்பு நம்மினத்துக்கு அவசியம் என்பதை சிந்திக்கின்ற தமிழ் கிறிஸ்தவர்கள் மறுக்கமாட்டார்கள். இருந்தபோதும் அடிப்படையிலேயே தமிழ் கிறிஸ்தவர்களிடம் ஒருதடவை மொழிபெயர்க்கப்பட்ட வேதத்தை மறுபடியும் திருத்தக்கூடாது என்ற எண்ணம் ஊறிப்போயிருப்பது தெரிகிறது. இந்தக் குறுகிய மனப்பான்மை தமிழில் சிறந்த வேதமொழிபெயர்ப்பு உருவாவதற்கு ஒரு தடையாக அமைந்திருக்கின்றது. இதற்குக் காரணம் வேதமொழிபெயர்ப்பு பற்றிய உண்மை அவர்களுக்குத் தெரியாததும், தெரிந்திருக்கிறவர்களுக்கும் அதை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பான்மை இல்லாததுமே.

Continue reading