1517ல் திருச்சபை வரலாற்றில் ஏற்பட்ட திருச்சபை சீர்திருத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் மார்டின் லூத்தர். அப்பணியில் கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட ஒரு கருவியாக அவர் இருந்தார். அந்த சீர்திருத்தத்தின் மூலம் வேதத்தில் இருந்து வெளிக்கொணரப்பட்ட சீர்திருத்த போதனைகளுக்கும், இறையியலுக்கும் உருவம் கொடுத்து வளர்த்த மனிதனாக ஜோன் கல்வினை கர்த்தர் பயன்படுத்தினார். லூத்தர் சபை சீர்திருத்தத்திற்கு அடித்தளம் அமைத்தார். கல்வின் அதன்மூலம் வெளிவந்த போதனைகளுக்கு உருவம் கொடுத்தார்.
சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஜோன் கல்வினைத் தவறாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள் அநேகம். அவருக்கு ஏற்பட்ட நிந்தனைகளுக்கு எண்ணிக்கை இல்லை. இருதயமில்லாத இறையியல் அறிஞர் என்று அடிக்கடி அவரை வர்ணித்திருக்கிறார்கள். ஆனால், அது உண்மையே அல்ல. நெகிழ்ந்த இருதயத்தைக் கொண்டு கிறிஸ்து இயேசுவின் ராஜ்ய விஸ்தரிப்பை மட்டுமே கண்ணுங் கருத்துமாக வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்து பணியாற்றியவர் ஜோன் கல்வின். திருச்சபைச் சீர்திருத்தப் பணியில் தன்னையே எரித்துக்கொண்டவர் கல்வின். அவருடைய இருதயம் கிறிஸ்துவுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது.
