முந்தைய இதழில் வந்திருந்த பக்தி வைராக்கியம் பற்றிய முதலாவது ஆக்கத்தில் இந்த பாடத்திற்கான முக்கிய வசனமாகிய தீத்து 2:13-14ஐ ஆராய்ந்திருந்தோம். இந்த வசனங்களிலும், வேதத்தின் ஏனைய வசனங்களிலிருந்தும் நாம், பக்தி வைராக்கியம் கடவுளிடமிருந்து வருகிறது என்பதைப் பார்த்தோம். இது சிலுவையில் கிறிஸ்து செய்த செயலின் மூலம் நமக்குக் கிடைக்கிறது. இது பரிசுத்த ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் செய்யும் செயலின் மூலம் நிகழ்கிறது. ஆகவே, நாம் பக்தி வைராக்கியத்தில் அதிகரிக்கவும் மேலும் உறுதிப்படவும் வேண்டுமானால் கடவுள் தம்முடைய ஆவியின் நிறைவை நம்மில் அதிகமாகத் தரவேண்டுமென்று நாம் கடவுளிடம் கேட்க வேண்டும். கடவுள் பக்தி வைராக்கியத்தை நமக்கு அதிகமாகத் தரவும் அதில் நீடித்திருக்கவும் கிருபை காட்டும்படி நாம் கடவுளிடம் மேலும் வலியுறுத்திக் கேட்க வேண்டும். இந்த ஆக்கத்தில் பக்தி வைராக்கியத்தைப் பற்றிய இரண்டாவது முக்கிய வசனத்தைப் படிக்கப்போகிறோம். அந்த வசனம் ரோமர் 12:11. இந்த வசனம் நமக்குக் கிறிஸ்தவ வைராக்கியம் என்ற இந்த முக்கியமான விஷயத்தித்தைப் பற்றிய முழுமையானதும் சமநிலையான பார்வையையும் தருகிறது. இந்த வசனத்தை இது அமைந்திருக்கும் வசனப் பகுதியின் அடிப்படையில் வாசித்து விளங்கிக்கொள்வோம்.