சபை ஒழுங்கு; திருத்தும் ஆத்தும கவனிப்பு – உன் சகோதரன் எங்கே? – ஜோய் செல்வதாசன், கிருபை சுவிசேஷ சபை வெளியீடு, ஜேர்மனி
திருச்சபையில் ஒழுங்குக் கட்டுப்பாடு (Church Discipline) இருக்கவேண்டும் என்பதை எவரும் மறுக்கமுடியாதபடி புதிய ஏற்பாடு அதுபற்றி பல இடங்களில் விளக்குகிறது. ஆனால், உலக சுகத்திற்கு ஆசைப்பட்டும், சுயநலத்தாலும் போதகர்கள் இன்று அதுபற்றி கவலைப்படாமல் இருக்கிறவர்கள் இருக்கட்டும், போகிறவர்கள் போகட்டும் என்ற மனப்பாங்கோடு ஊழியம் செய்து வருகிறார்கள். சபை ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றி விளக்கும் நூல்களைத் தமிழில் காண்பதென்பது அரிது. திருமறைத்தீபத்தில் அதுபற்றி அதிகம் நான் எழுதிவந்திருக்கிறேன். ஜேர்மனியில் இருந்து பணிபுரிந்து வரும் ஜோய் செல்வதாசன் திருச்சபை ஒழுங்குக் கட்டுப்பாடு பற்றித் தான் எழுதியுள்ள நூலை எனக்கு அனுப்பிவைத்து அதுபற்றிய என்னுடைய கருத்துக்களை எழுதும்படிக் கேட்டிருந்தார். அவருடைய முயற்சியை நான் பாராட்டுகிறேன். ஒழுங்குக் கட்டுப்பாட்டிற்கான அவசியத்தை சுட்டி, அதை அநேகர் செய்யாமலிருப்பதற்கான காரணங்களை விளக்கி, எது ஒழுங்குக் கட்டுப்பாடு, எது ஒழுங்குக் கட்டுபாடு இல்லை என்பவற்றை முன்வைத்து, ஒழுங்குக் கட்டுப்பாட்டைத் திருச்சபை தவிர்க்க முடியாது என்று உணர்த்துவது ஆசிரியரின் நோக்கமாக இருக்கிறது என்பதை நூல் உணர்த்துகிறது.