கட்டுரை எழுதலாம் வாருங்கள்
(பாகம் 2)
வாசிப்பதும் எழுதுவதும் மனிதனின் அடிப்படைத் தேவைகள். அதை அனைத்து சமுதாயமும் ஏற்றுக்கொள்கிறபோதும் அதற்கான வசதிகளை எல்லா சமுதாயமும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதில்லை. உலகத்தின் சில சமுதாயங்களில் வேலை மற்றும் வருமானத்தைப் பெற மட்டுமே இதில் கவனம் செலுத்தப்படுகிறது. வாசிப்பும் எழுத்தும் மனிதனுக்கு அத்தியாவசியம், ஏன் தெரியுமா? மற்ற மனிதர்களோடு தொடர்புகொள்ளக்கூடியவனாக படைக்கப்பட்டிருக்கும் மனிதன் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளவும், பிறரின் சிந்தனைகளை அறிந்துகொள்ளவும் வாசிப்பும் எழுத்தும் அவசியமாகிறது. மனிதன் மிருகங்களைவிட வித்தியாசமாக, சிறப்பாகப் படைக்கப்பட்டிருக்கிறான். மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் வாசிப்பும் எழுத்தும் தேவையில்லை; மனிதனுக்கு அவசியம். இதற்கெல்லாம் மேலாக கடவுளை மகிமைப்படுத்தவேண்டிய ஒரே நோக்கத்திற்காகப் படைக்கப்பட்டிருக்கிற மனிதன் கடவுளை அறிந்துகொள்ள வாசிப்பும் எழுத்தும் அவசியம். தன்னை வெளிப்படுத்தியிருக்கும் கடவுள் அதை எழுத்தில் தந்திருப்பதை நினைத்துப் பாருங்கள். படைப்பாகிய பொதுவான வெளிப்பாட்டைத் தருவதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லையே. பொதுவான வெளிப்பாட்டைவிட மேலான இரட்சிப்புக்கு வழிகாட்டும் சுவிசேஷத்தை அவர் எழுத்திலல்லவா தந்திருக்கிறார். இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ளுவதற்கும், கடவுளின் அனைத்துப் போதனைகளையும் அறிந்துகொள்ளுவதற்கும், பகிர்ந்துகொள்ளுவதற்கும் வாசிப்பும் எழுத்தும் அவசியமாகிறது. கிறிஸ்தவனுக்கு வாசிப்பும் எழுத்தும் மிகவும் அவசியம் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனால், வேலைக்கும் வருமானத்திற்கும் மட்டுமே படிப்பு இருந்துவரும் இன்றைய சமுதாய சூழலில் வாசிப்பையும் எழுத்தையும் அதற்காக மட்டும் நாடக்கூடாது என்று கிறிஸ்தவர்களுக்கு புரியவைப்பதெப்படி?